"உள்ளே வராதீங்க".. சிஎஸ்கே மேட்சுக்கு முன் வார்னரை திருப்பி அனுப்பிய அணி நிர்வாகம்? உண்மை என்ன?
துபாய்: நேற்று சிஎஸ்கே போட்டிக்கு முன்பாக டேவிட் வார்னர் ஹைதராபாத் அணி மூலம் ஹோட்டலுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ஹைதராபாத் அணிக்கும் மூத்த வீரர் டேவிட் வார்னருக்கும் இடையிலான மோதல் வெட்ட வெளிச்சமாக தெரிய தொடங்கி உள்ளது. ஐபிஎல் 2021 தொடரின் முதல் பாதியில் ஹைதராபாத் அணியின் கேப்டன் பதவியில் இருந்து வார்னர் நீக்கப்பட்டார். வார்னருக்கும் அணி நிர்வாகத்திற்கும் இடையில் 11 பேர் கொண்ட அணியை தேர்வு செய்வதில் மோதல் ஏற்பட்டது.
இன்னொரு பக்கம் ஹைதராபாத் அணியும் வரிசையாக போட்டிகளில் தோல்வியை தழுவி வந்தது. இதன் காரணமாக டேவிட் வார்னரை கேப்டன்சியில் இருந்து நீக்கிவிட்டு வில்லியம்சனை ஹைதராபாத் அணி கேப்டனாக நியமித்தது.

கேப்டன்
ஆனால் வில்லியம்சன் வந்த பின்பும் பெரிதாக ஹைதராபாத் அணி வெற்றிபெறவில்லை. அதோடு ஹைதராபாத் ஆடும் அணியில் இருந்தும் வார்னர் நீக்கப்பட்டார். சிஎஸ்கேவிற்கு எதிரான கடந்த போட்டியில் வார்னர் ஆடவில்லை. அதோடு சிஎஸ்கே போட்டியின் போது இவர் மைதானத்திற்குள்ளும் வரவில்லை. இந்த நிலையில் அவரை வேண்டும் என்றே அணி நிர்வாகம் மைதானம் செல்ல அனுமதிக்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

அனுமதிக்கவில்லை
அதாவது பேருந்தில் சக வீரர்களோடு செல்ல வார்னருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. நீங்கள் வர முடியாது என்று வார்னரிடம் ஹைதராபாத் அணி குறிப்பிட்டதாக இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது. இதனால்தான் நேற்று சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியின் போது வார்னர் மைதானத்தில் காணப்படவில்லை என்று பல்வேறு விளையாட்டு ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டு உள்ளது.

ராஜஸ்தான்
முன்னதாக இவர் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் ஆடவில்லை. அதோடு ராஜஸ்தானுக்கு எதிராக போட்டியின் போது மைதானத்திலும் இடம்பெறவில்லை. இது பெரிய அளவில் சர்ச்சையானது. ஆனால் இதற்கு விளக்கம் அளித்த ஹைதராபாத் அணி, வார்னரை நாங்கள் ஹோட்டலில் விட்டுவிட்டு வரவில்லை. அவர் மட்டும் ஹோட்டலில் தங்கவில்லை. மற்ற மூத்த வீரர்களும் ஹோட்டலில்தான் இருந்தனர்.

ஜாதவ்
ஜாதவ் போன்ற வீரர்களும் ஹோட்டலில்தான் இருந்தனர். அவர்கள் ஹோட்டலில் இருந்து போட்டியை பார்த்தனர் என்று ஹைதராபாத் அணி விளக்கம் கொடுத்தது. இந்த நிலையில்தான் நேற்று நடந்த போட்டியின் போதும் வார்னர் இதேபோல் ஹோட்டலில் தங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. நேற்று போட்டிக்கு ஏன் வார்னர் வரவில்லை என்பது குறித்து அணி நிர்வாகம் விளக்கம் எதையும் கொடுக்கவில்லை.

உண்மை
ஆனால் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது தொடர்பாக கமெண்ட் ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் அணி நிர்வாகம் மீது குற்றச்சாட்டு எதையும் வைக்கவில்லை. மாறாக நான் 18 பேர் கொண்ட அணியில் நான் இடம்பெறவில்லை. அதனால் நான் மைதானத்திற்கு செல்லவில்லை. 18 வீரர்கள் மட்டுமே அணி சார்பாக மைதானம் சென்றனர் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதனால் வார்னரை 18 பேர் கொண்ட அணியில் தேர்வு செய்யாததே அவர் மைதானம் செல்லாததற்கு காரணம், மற்றபடி அவர் அவமானப்படுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications