"தோப்புக்கு" எடப்பாடி வைத்த செக்.. உள்ளே வந்தார் செங்கோட்டையன்.. ஈரோடு மாவட்டத்தில் அதிரடி மாற்றம்
ஈரோடு: கொங்கு மண்டலத்தில் அழுத்தமாக கால்பதிக்க நினைக்கும் திமுகவிற்கு செக் வைப்பதற்காக ஈரோடு புறநகர் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு, அது இரண்டு முன்னாள் அமைச்சர்கள் வசம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது.
நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில், கொங்கு மண்டலத்தில் மட்டும் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணியை விட குறைந்த தொகுதிகளில் வெற்றி பெற்றது.
தொடர்ச்சியாக, கொங்கு மண்டலத்தில் திமுக, அதிமுகவை விட குறைவாகத்தான் வெற்றிகளை பதிவு செய்து வருகிறது. இந்த முறை எப்படியும் இந்த நிலைமையை மாற்றி விட வேண்டும் என்பதில் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார்.
தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இணைந்தார்
இதன் காரணமாக கொங்கு மண்டலத்தில் உள்ள சில முக்கிய புள்ளிகளை திமுகவில் இணைப்பதில் மும்முரம் காட்டி வருகிறார். அப்படி இணைந்தவர்தான் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தோப்பு வெங்கடாசலம். இதேபோல மக்கள் நீதி மய்யம் கட்சி பிரமுகர் மகேந்திரன் சமீபத்தில் திமுகவில் சேர்க்கப்பட்டார். இதில், தோப்பு வெங்கடாசலம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டசபைத் தொகுதியில் 2011ஆம் ஆண்டு மற்றும் 2016ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அடுத்தடுத்து வெற்றி பெற்றவர். 2011 ஆம் ஆண்டில் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் முதலில் வருவாய் துறை அமைச்சராகவும் பிறகு சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். ஆனால் 2016 ஆம் ஆண்டு மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு இவருக்கு அமைச்சர் பதவி தரப்படவில்லை.
ஈரோட்டை கோட்டையாக்குவோம்
இந்த நிலையில்தான் 2021 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தேர்தலை சந்தித்தபோது அதிமுக சார்பில் போட்டியிட தோப்பு வெங்கடாசலத்திற்கு டிக்கெட் தரப்படவில்லை. அமைச்சர்களாக இருந்த செங்கோட்டையன் மற்றும் கே.சி.கருப்பண்ணன் ஆகியோர் தோப்பு வெங்கடாசலத்தை ஓரம் கட்டியதாக கூறப்பட்டது . இந்த நிலையில்தான் சமீபத்தில் அவர் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து கட்சியில் இணைந்தார். ஈரோடு, ஸ்டாலினின் எக்கு கோட்டையாக மாறும் என்று அப்போது அவர் சூளுரைத்தார்.
கொங்கு மண்டலத்தை காப்பாற்ற மூவ்
கொங்கு மண்டலத்துக்கு திமுக குறி வைத்துள்ளதை அறிந்த எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் அதை முறியடித்து, அதிமுகவை பலப்படுத்த காய் நகர்த்த ஆரம்பித்துள்ளனர். அதிலும் குறிப்பாக தோப்பு வெங்கடாசலம் அரசியலில் எழுச்சி பெற்று திமுகவுக்கு ஈரோடு மாவட்டத்தில் வழியை ஏற்படுத்திக் கொடுத்து விடக்கூடாது என்பதில் அதிமுக தலைமை திட்டவட்டமாக இருப்பது இன்று வெளியான ஒரு உத்தரவின் மூலம் தெளிவாக தெரிகிறது.
இரண்டாக பிரிக்கப்பட்ட ஈரோடு மாவட்டம்
ஈரோடு மாநகர் மாவட்டம் மற்றும் ஈரோடு புறநகர் மாவட்டம் என நிர்வாக வசதிக்காக அதிமுக இரு மாவட்டங்களாக பிரித்து இருக்கிறது. ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளராக கே.வி.ராமலிங்கம் பொறுப்பு வகிக்கிறார். புறநகர் மாவட்ட செயலாளராக கே.சி.கருப்பண்ணன் பொறுப்பு வகித்தார். ஆனால் இதில் புறநகர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, அதிமுக ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம் என்ற பெயரில் ஒன்று ஏற்படுத்தப்பட்டு அதற்கு கேஏ செங்கோட்டையன் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் என்ற பெயரில் உருவாகியுள்ள மாவட்டத்திற்கு கேசி கருப்பண்ணன் செயலாளர் பதவியில் தொடர இருக்கிறார். சீனியரான செங்கோட்டையனிடம் கூடுதல் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதன் மூலமாக ஈரோடு மாவட்டத்தை திமுகவிடம் இழந்துவிடக்கூடாது என்பதில் அதிமுக தலைமை மிகவும் உறுதியாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
ஈரோடு நகர மாவட்ட கோரிக்கை
இன்னொரு பக்கம், ஈரோடு மாவட்டத்திற்குள் அதிமுக கட்சிக்குள் வேறு யாருக்கும் அதிருப்தி எழுந்து விடக் கூடாது என்பதில், எடப்பாடி பழனிச்சாமி ரொம்பவே உஷாராக காய் நகர்த்துகிறார். மொடக்குறிச்சி எம்.எல்.ஏ.வாகவும், அதிமுக மாநகர், மாவட்ட செயலாளராகவும் இருந்த சிவசுப்பிரமணியிடம் இருந்து 5 வருடங்கள் முன்பு, மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டுதான், கே.வி.ராமலிங்கத்திற்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், தேர்தலில் கே.வி.ராமலிங்கம் தோல்வியடைந்தார். அதேநேரம், மொடக்குறிச்சியில் கூட்டணி கட்சியான பாஜக போட்டியிட்ட போதிலும், அதன் வேட்பாளரை வெற்றி பெற வைத்தார் சிவசுப்பிரமணி. எனவே, ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து கே.வி.ராமலிங்கத்தை மாற்ற வேண்டும் என்று சுப்பிரமணி வலியுறுத்துவதாக கூறப்படுகிறது.
தோப்பு வெங்கடாசலத்திற்கு சக்கர வியூகம்
அதேநேரம், கே.வி.ராமலிங்கம் மற்றும் சிவசுப்பிரமணி ஆகிய இருவரில் ஒருவரையும் பகைத்துக் கொள்ள எடப்பாடி விரும்பவில்லை. எனவே, சிவசுப்பிரமணியை 4 தினங்கள் முன்பு அழைத்து பேசி ஆலோசனை நடத்தி அவருக்கு ஊக்கம் கொடுத்து அனுப்பி வைத்தார். சூட்டோடு சூடாக இப்போது ஈரோடு புறநகர் மாவட்டம் 2ஆக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மூவ்வையும் எடப்பாடி பழனிச்சாமி பார்த்து பார்த்து எடுத்து வைக்கிறார். திமுகவுக்கும், தோப்பு வெங்கடாசலத்திற்கும் எதிராக வகுக்கப்பட்டுள்ள இந்த சக்கரவியூகம் வெற்றி பெறுமா இல்லையா என்பது வருங்காலங்களில் தெரியவரும்.