அது அருணாசலப் பிரதேசம் இல்லையாம்...தெற்கு திபெத்தாம்.. சீனாவின் திமிர்வாதம்
டெல்லி: இந்தியாவின் ஒரு அங்கமாக இருக்கும் அருணாசலப்பிரதேசத்தை தொடர்ந்து சீனா தனது பகுதியாக அறிவித்து வருகிறது. மேப்பிலும் தனது பாகமாக சித்தரித்து இருந்தது. இன்று அருணாசலப் பிரதேசத்தை திபெத்தின் தெற்கு பகுதி என்று மீண்டும் அறிவித்து இந்தியாவை சீண்டியுள்ளது.
அருணாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த 5 பேரை கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி சீன ராணுவ வீரர்கள் கடத்திச் சென்றதாக அவர்களின் பிடியில் இருந்து தப்பிய இருவர் தெரிவித்து இருந்தனர். இன்று வரை அவர்களை சீன ராணுவம் விடுவிக்கவில்லை. ஆனால், அவர்களை கடத்தவில்லை என்று சீன ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.
லாக்டவுன் தளர்வு.. மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.. முதல்வர் பழனிசாமி கோரிக்கை..என்ன சொன்னார்?
தெளிவாக இருக்கிறோம்
சீன விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவோ லிஜியினிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து நேற்று கேள்வி எழுப்பி இருந்தனர். இதற்கு பதில் அளித்த லிஜியன், ''சீன-இந்திய எல்லை விவகாரத்தில் சீனா உறுதியாக இருக்கிறது. உதாரணத்திற்கு தெற்கு திபெத் விஷயத்தில் தெளிவாக, உறுதியாக இருக்கிறோம். சீனப் பகுதியை ஆக்கிரமித்து, அருணாசலப் பிரதேசம் உருவாக்கப்பட்டு இருப்பதை நாங்கள் ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை. நீங்கள் கேட்கும் அந்த இளைஞர்கள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது'' என்று தெரிவித்து இருந்தார்.
அருணாசலப் பிரதேசம்
பிப்ரவரி 20ஆம் தேதி அருணாசலப் பிரதேசத்தின் மாநில நாளாக கொண்டாடப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் முடிந்த 34ஆம் ஆண்டு மாநில நாளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போதும் இந்தப் பிரச்சனையை சீனா எழுப்பி இருந்தது.
சீனா எச்சரிக்கை
சீன பிராந்தியத்தின் இறையாண்மையை இந்திய அமைச்சர் மீறி இருப்பதாகவும், இந்தப் பகுதியில் அமைதியை சீர்குலைத்து இருப்பதாகவும் சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்து இருந்தது.
பேச்சுவார்த்தை
தொடர்ந்து எல்லையிலும் சீனா சண்டித்தனம் செய்து வருகிறது. கிழக்கு லடாக் பகுதியில் சில இடங்களில் அத்துமீறி இந்தியாவுக்கு தலைவலி கொடுத்து வருகிறது. பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் முடிந்த பின்னரும், மாஸ்கோவில் இருநாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் பேசிய பின்னரும் எல்லையில் இந்தியா, சீனா இடையே பதற்றம் நிலவி வருகிறது. தற்போது அடுத்த கட்டமாக அருணாசலப்பிரதேசத்தை உரிமை கொண்டாடியுள்ளது.