ரத கஜ துரக பதாதிகள்..ஈரோடு கிழக்கில் திமுக படைத்தளபதிகள்..சிந்தாமல் சிதறாமல் "சக்கர வியூகம்"
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொகுதி தேர்தல் பிரச்சார களத்தில் பல சுவாரஸ்ய சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. திமுகவினர் சக்கர வியூகம் அமைத்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
ஈரோடு: எதிர்க்க ஆள் இல்லைன்னு நினைச்சு எதிரியை சாதாரணமாக நினைத்து விடக்கூடாது என்று அரசியல் களத்தில் சொல்வார்கள். அப்படித்தான் தற்போது இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் தை மாத குளிரையும் தாண்டி அனல் பறக்கிறது. கடந்த கால இடைத்தேர்தல்களில் திமுக கற்றுக்கொண்ட மொத்த வித்தைகளையும் களமிறக்கி வருகிறது. அத்தனை மாவட்ட செயலாளர்களும் தங்களின் நிர்வாகிகளை பிரச்சார களத்தில் களமிறக்கி விட்டனர். களத்தில் பலமான எதிரி இல்லாதது ஒரு பக்கம் சாதகமான அம்சமாக இருந்தாலும் எதையும் சாதாரணமாக எடை போட்டு விடக்கூடாது என்று 75 வாக்காளர்களுக்கு ஒரு நிர்வாகி என பிரித்து விட்டு வேலை செய்து வாக்காளர்களை கவர்ந்து வருகின்றனர்.
சட்டசபை தேர்தலின் போது அந்தந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளரும் அந்தந்த மாவட்ட செயலாளர்களும் நிர்வாகிகளும் மட்டும்தான் வாக்கு சேகரிக்க பிரச்சார களத்திற்கு செல்வார்கள். இடைத்தேர்தலில் எப்படியாவது வென்றாக வேண்டும் என்று அந்த கட்சியின் மொத்த படையும் களமிறங்கும்.
திருமங்கலம் தொகுதியில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் இருந்து ட்ரெண்ட் மொத்தமாக மாறி விட்டது. வாக்காளர் பட்டியலில் உள்ள பகுதி வாரியாக பிரித்து ஒரு வாக்காளர் விடாமல் வாக்கு சேகரிப்பதுதான் இடைத்தேர்தல் ட்ரெண்ட். அதே பார்முலா ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலிலும் கடைபிடிக்கப்படுகிறது.
கடந்த சட்டசபை தேர்தலின் போது ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருமகன் ஈவெராவின் எதிர்பாராத மரணம் இப்போது இடைத்தேர்தலை அந்த தொகுதி மக்களுக்கு கொண்டு வந்துள்ளது. திடீரென அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தல் என்றாலும் அனைத்து அரசியல் கட்சியினரும் தயாராகி விட்டனர்.
கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு சீட்டை ஒதுக்கிய கையோடு வேட்பாளரை அறிவிக்கும் முன்னதாகவே , பிரச்சார களத்தில் இறங்கியது திமுக. தேர்தல் பணிக்குழுவில் 12 அமைச்சர்கள், 7 எம்.எல்.ஏக்கள், 2 எம்பிக்கள் உள்ளடக்கிய 32 பேர் நியமிக்கப்பட்டனர். ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பணிக்குழுவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எஸ்.முத்துசாமி, எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன், அர.சக்கரபாணி, மு.பெ.சாமிநாதன், வி செந்தில்பாலாஜி, ஆவடி சா.மு.நாசர், கயல்விழி செல்வராஜ், மதிவேந்தன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பணிக்குழுவில் அந்தியூர் செல்வராஜ், கோவை நா.கார்த்திக், தளபதி முருகேசன், தொ.அ.ரவி, க.வசந்தம் கார்த்திகேயன், தா.உதயசூரியன், சேலம் ஆர்.ராஜேந்திரன், டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆர். சிவலிங்கம், என். நல்லசிவம், இல.பத்மநாபன், பா.மு.முபாரக், தே.மதியழகன், கே ஆர்.என்.ராஜேஸ்குமார், எஸ்.எம். மதுரா செந்தில், பெ.பழனியப்பன், ஒய்.பிரகாஷ், திருப்பூர் செல்வராஜ், ஐ.பி.செந்தில்குமார், தடங்கம் சுப்ரமணி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
பணிக்குழுவில் பெயர் இல்லாத அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்து மாவட்டச் செயலாளர்களும் ஈரோடு கிழக்குத் தொகுதியில் களமிறக்கி தேர்தல் பணிகளை கவனித்து வருகின்றனர். இதனால் ஈரோடு கிழக்குத் தொகுதியில் திரும்பிய பக்கமெல்லாம் திமுகவினரை காண முடிகிறது.
ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் தன்னுடன் தங்கள் மாவட்டத்தில் இருந்து நிர்வாகிகளை ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அழைத்து வந்து தேர்தல் பணிகளை செய்து வருகிறார்கள். மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் பி. மூர்த்தி, மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மு. மணிமாறன் தலைமையில் களமிறங்கியுள்ள நிர்வாகிகள் வீடு வீடாக சென்று வாக்குகளை சேகரிக்க ஆரம்பித்து விட்டனர்.
வாக்காளர் பட்டியலை கையில் வைத்துக்கொண்டு 75 வாக்காளர்களுக்கு ஒரு நிர்வாகி என பிரித்து அவர்களின் தொலைபேசி எண்ணுடன் லிஸ்ட் ரெடி செய்து வைத்துக்கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். காய்கறி கடை, பழக்கடை பூக்கடை என சிறு வியாபாரிகளையும் விடாமல் வீடு வீடாக வாக்கு சேகரித்து வருகின்றனர். மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் பிரச்சார களத்தில் பம்பரமாக சுழன்று வீடு வீடாக சென்று நோட்டீஸ் கொடுத்து வாக்காளர்களிடம் வாக்கு சேகரிக்க தொடங்கி விட்டார். ஒரு ஆள் விடக்கூடாது தொடர்ந்து வாக்கு சேகரிக்க வேண்டும் என்பதுதான் நிர்வாகிகளுக்கு போட்ட உத்தரவு.
வலிமையான எதிர்கட்சியாக இருந்த அதிமுக இப்போது பிளவு பட்டு இருப்பது திமுகவிற்கு சாதகமாக இருந்தாலும் அதிமுக தொண்டர்களைப் பொருத்தவரை வேட்பாளரை நன்றாக அடையாளம் தெரியும். தொகுதிக்கு பழக்கமானவர் என்பதோடு கடந்த காலங்களில் ஆளுங்கட்சியாக இருந்த போது பல இடைத்தேர்தல்களை சந்தித்து இருப்பார்கள் என்பதால் அவர்களும் ஆளுங்கட்சியின் வியூகத்தை உடைக்க எதிர் வியூகம் எப்படி அமைக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர்களாகவே இருப்பார்கள். எனவேதான் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவனை ஜெயிக்க வைக்க ரத கஜ துரக பதாதிகளை களமிறக்கியுள்ளது திமுக.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பணியாற்றும் கழக நிர்வாகிகளுக்கு உதவிடும் வகையில், திமுக சட்டத்துறை சார்பில், சட்டத் துறை இணைச் செயலாளர்கள் இ.பரந்தராமன், எம்.எல்.ஏ (99406-66269) மற்றும் ஈரோடு சு.இராதாகிருஷ்ணன் (98427-55335) மற்றும் வழக்கறிஞர் அர்ஜூன் (95009-92005) ஆகியோர் தலைமையில், கழக வழக்கறிஞர்கள் அடங்கிய வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது.
அதிமுக தொண்டர்களின் கண்கள் சுப்ரீம் கோர்ட்டை நோக்கி..யாருக்கு இரட்டை இலை? எகிறும் எதிர்பார்ப்பு
தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 7ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. பிப்ரவரி 27ஆம் தேதிதான் வாக்குப்பதிவு என்றாலும் திமுக, காங்கிரஸ் மட்டுமே உள்ள பிரச்சார களம் இப்போதே அனலடிக்க ஆரம்பித்து விட்டது. நாம் தமிழர் கட்சி,தேமுதிகவும் பிரச்சார களத்தில் பிசியாக இருக்கிறது. யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற குழப்பதிலேயே அதிமுகவின் இரு அணிகளுமே இருக்கின்றன. பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் அமைத்துள்ள வார் ரூம் தனியாக செயல்பட்டு வருகிறது. மொத்தத்தில் தை மாத குளிரையும் தாண்டி ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது.