ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் திமுக ஜெயிக்காது.. நாளைக்கு வரும் ஹேப்பி நியூஸ்: செங்கோட்டையன்
இடைத்தேர்தலில் திமுக ஜெயிக்காது என்றும் நாளை மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும் என்றும் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஈரோடு: அதிமுக வேட்பாளர் நாளை அறிவிக்கப்படலாம் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சூசகமாக கூறியுள்ளார். இடைத்தேர்தலில் திமுக ஜெயிக்காது என்றும் நாளைய தினம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும் என்றும் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மாரடைப்பு காரணமாக கடந்த 4ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சிவப்பிரசாத் , தேமுதிக சார்பில் ஆனந்த் , நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி அணியும், ஒ.பன்னீர் செல்வம் அணியும் தேர்தல் பணிக்குழுவை அறிவித்துள்ளனர். அதே நேரத்தில் அதிமுக சார்பில் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். அதிமுக தரப்பில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் என இருதரப்பினரும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதால் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. இரட்டை இலை சின்னம் பிரச்சனையால் வேட்பாளரை அறிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இரட்டை இலை கிடைக்காவிட்டால் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவோம் என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பு கூறியுள்ளது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அதிமுக வேட்பாளர் குறித்த கேள்விக்கு நாளை மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும் என்றார். வாக்காளர்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும் இடைத்தேர்தலில் அதிமுக வெல்வது உறுதி எனவும் கே.ஏ செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications