“என்ன வேணா நடக்கட்டும் நாங்க சந்தோசமா இருப்போம்.. மனிதர்களை ஏக்கப்பட வைத்த குரங்குகள்
நீச்சல்குளத்தில் குரங்குகள் குதூகலமாக குளித்து விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஈரோடு: கோடை வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க குரங்குகள் கூட்டம் ஒன்று நீச்சல் குளத்தில் குதூகல குளியல் போட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனா தொற்று 2வது அலை காரணமாக தமிழ்நாட்டில் மீண்டும் பகுதி நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள், கேலிக்கை பூங்காங்கள், ரிசார்ட்கள், தியேட்டர்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இதன் காரணமாக ஓட்டல்கள், ரிசார்ட்கள் எல்லாம் ஆளரவமின்றி காணப்படுகின்றன. இதனால் அந்த இடங்களை எல்லாம் விலங்குகள் தான் தற்போது ஆக்கிரமித்து வருகின்றன.
அந்த வகையில் ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் நீச்சல் குளத்தில் குரங்குள் ஜாலியாக குதித்து விளையாடும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மனிதர்கள் இல்லாமல் காலியாக இருக்கும் நீச்சல் குளத்தில் குரங்குகள் ஜாலியாக குளிக்கின்றன.
அதுவும் சில குரங்குகள் மனிதர்கள் மாதிரியே நீச்சம் குளத்தில் உள்ள ஒரு கோபுரக் கூண்டில் மேல் ஏறி தொப்பென தண்ணீரில் குதித்து நீந்துகிறது. மீண்டும் மீண்டும் அந்த குரங்குகள் ஜாலியாக மேலிருந்து கீழே குதித்து விளையாடுகின்றன.
குரங்குகள் குதூகல குளியல் போடுவதை அங்கிருந்த மக்கள் பார்த்து ரசித்ததுடன், அதை வீடியோவாகப் பதிவு செய்து சமூகவலைதளங்களில் பதிவிட்டனர். குரங்குகள் குதூகல குளியல் போடும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உண்மையில் குரங்குகள் மகிழ்ச்சியாக விளையாடும் அந்த வீடியோவைப் பார்க்கும் போது, நமக்கும் கொஞ்சம் ஏக்கமாகத்தான் உள்ளது. கொரோனா பிரச்சினையெல்லாம் தீர்ந்து எப்போது பழையபடி பயமில்லாமல் எப்போது இப்படி ஜாலியாக குளித்து மகிழப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பு எழுகிறது.