இவ்வளவு சீக்கிரமா? ஈரோடு கிழக்கில் ட்விஸ்ட்! அதிர்ந்து போன எடப்பாடி.. தாறுமாறு குஷியில் ஓபிஎஸ்! ஏன்
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் இவ்வளவு வேகமாக அறிவிக்கப்பட்டு இருப்பது எடப்பாடி பழனிசாமி தரப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சட்டமன்ற உறுப்பினர் திருமகன் இயற்கை எய்திய நிலையில்,ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27-ம் தேதி நடைப்பெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடக்கும் என்று இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் பீவர் தொடங்கி உள்ளது.
2 பக்கமும் சிக்கல்! ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்! நடுவில் மாட்டிய எடப்பாடி! காத்திருக்கும் மெகா ஆபத்து
ஈரோடு கிழக்கு
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈவெரா திருமகன். இவர் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவார். உடல்நிலை மோசமான நிலையில் ஈவெரா திருமகன் கடந்த ஜனவரி 4ம் தேதி மரணம் அடைந்ததார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார். இதையடுத்தே ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இடைத்தேர்தல்
பொதுவாக ஒரு தொகுதி காலியாகிறது என்றால் அதை சட்டசபை செயலாளர் அறிவிப்பார். அதன்பின் அந்த தகவல் மாநில தேர்தல் ஆணையத்திற்கு செல்லும். பின்னர் இந்திய தேர்தல் ஆணையம் அதை உறுதி செய்யும். அதன்பின் அந்த தொகுதி காலி என்று அறிவிக்கப்படும். இதற்கெல்லாம் பெரும்பாலும் 1 மாதங்கள் கூட எடுக்கும். இதன்பின் காலி என்று அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 6 மாதங்களில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும். மாநிலத்தில் வேறு தேர்தல் இல்லாத பட்சத்தில், அதவாது சட்டசபை தேர்தல், உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் இல்லாதபட்சத்தில் வேறு மாநில தேர்தலோடு சேர்த்து இந்த தேர்தலும் அறிவிக்கப்படும்.
6 மாதம்
இதற்கெல்லாம் பெரும்பாலும் 2 -3 மாதங்களாவது எடுக்கும். ஆனால் இந்த முறை ஈரோடு கிழக்கு தேர்தல் 14 நாட்களில் அறிவிக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏ ஈவெரா திருமகன் இறந்து இரண்டு வாரங்களில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுதான் தற்போது எடப்பாடி பழனிசாமி தரப்பை உலுக்கி உள்ளது. ஏனென்றால் அதிமுக பொதுக்குழு வழக்கு முடிந்தாலும் இன்னும் தீர்ப்பு வரவில்லை. அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை இன்னும் தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டது, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டது, பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டது என்று எதையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை.
நீக்கம்
இப்படி இருக்க அதிமுகவில் இப்போதும் ஓ பன்னீர்செல்வம்தான் ஒருங்கிணைப்பாளர், எடப்பாடி பழனிசாமிதான் இணை ஒருங்கிணைப்பாளர். இப்படிப்பட்ட நிலையில், இடைத்தேர்தல் நடத்த 6 மாதங்கள் இருக்கும் நிலையில் இவ்வளவு வேகமாக அறிவித்திருப்பது, எடப்பாடி பழனிச்சாமிக்கு இந்த அறிவிப்பு அக்னி பரிட்சையாகவே பார்க்கப்படுகிறது. ஏனென்றால் எடப்பாடி இப்போது ஓபிஎஸ்சோடு இணைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இருவரும் சேர்ந்துதான் அதிமுக வேட்பாளருக்கான் பி பார்மில் கையெழுத்து போட வேண்டும். இரண்டு பேரும் கையெழுத்து போட வேண்டியிருப்பதாலும், தீர்ப்பு இன்னும் வராததாலும் எடப்பாடி இறங்கிப்போய் ஓபிஎஸ்சை அரவணைக்க தேவை எழுகிறது.
தேர்தல்
தேர்தல் ஒரு இரண்டு மாதங்கள் கழித்து வந்து இருந்தால் எடப்பாடிக்கு ஒரு முடிவு தெரிந்து இருக்கும். எடப்பாடிக்கு ஆதரவாகவோ, எதிர்க்கவோ தீர்ப்பு வந்து இருக்கும். அவரும் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வசதியாக இருந்திருக்கும். ஆனால் தற்போது 1 மாதத்திற்குள் தீர்ப்பு வருவதால், எடப்பாடி ஓ பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. இல்லையென்றால் இந்த தொகுதியை எடப்பாடி பழனிசாமி கூட்டணி கட்சிக்கு கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது. ஒருவேளை கூட்டணி கட்சிக்கு வாய்ப்பு கொடுக்காமல் எடப்பாடி ஒரு வேட்பாளரை நிறுத்தினால்.. பதிலுக்கு ஓ பன்னீர்செல்வமும் ஒரு வேட்பாளரை நிறுத்துவார்.
சின்னம்
இரண்டு தரப்பும் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரும் நிலை ஏற்படும்,. இதனால் இரட்டை இலை சின்னம் பறிபோக வாய்ப்பு உள்ளது. தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கும் வாய்ப்பு உள்ளது. இதுதான் தற்போது ஓ பன்னீர்செல்வம் தரப்பை குஷியாக்கி உள்ளது. ஒன்று எடப்பாடி தன்னிடம் இறங்கி வர வேண்டும். இல்லையென்றால் சின்னம் முடங்கும்.எப்படி நடந்தாலும் ஓ பன்னேர்செல்வத்திற்கு சந்தோசம்தான். இவ்வளவு வேகமாக தேர்தல் ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருப்பது எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு இதனால் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் எடப்பாடி கூட்டணி கட்சிக்கு இடத்தை கொடுப்பாரா? அல்லது சுயமாக வேட்பாளரை நிறுத்தி முட்டி மோதுவாரா? அல்லது ஓ பன்னீர்செல்வத்துடன் இணக்கமாக செல்வாரா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.