பாஜகவிடம் தோற்கக் கூடாது.. தெலுங்கானா சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த கே.சி.ஆர்.வியூகம்?
ஹைதரபாத்: தெலுங்கானா சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்துவதற்கான ஆலோசனைகளை தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவரும் மாநில முதல்வருமான சந்திரசேகர ராவ் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனி மாநிலம் பிரிக்கப்பட்டு 2014-ம் ஆண்டு முதலாவது சட்டசபை தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 119 எம்.எல்.ஏக்களைக் கொண்டது தெலுங்கானா சட்டசபை.
தெலுங்கானாவின் முதலாவது சட்டசபை தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்) 103 இடங்களில் வென்றது. ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி 7; காங்கிரஸ் 5; பாஜக 3 இடங்களில் வெற்றி பெற்றன. முதல்வராக டிஆர்எஸ் கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் பதவி வகித்தார்.
நபிகள் நாயகம் பற்றிய சர்ச்சை கருத்து..கைது செய்யப்பட்ட தெலுங்கானா எம்எல்ஏ ஜாமீனில் விடுதலை
தெலுங்கானாவில் மீண்டும் டிஆர்எஸ்
தெலுங்கானா சட்டசபையின் பதவிக் காலம் 5 ஆண்டுகள் முடிவடைவதற்கு 9 மாதங்களுக்கு முன்னரே 2018-ல் 2-வது சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் தெலுங்குதேசம், காங்கிரஸ், சிபிஐ கூட்டணி அமைத்து டிஆர்எஸ் கட்சியை எதிர்த்து நின்றன. ஆனாலும் டிஆர்எஸ் கட்சி 88 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்க வைத்தது. ஆனால் காங்கிரஸ் கட்சி 19 இடங்களில் வென்று வலிமையை காட்டியது. பாஜக 1; தெலுங்குதேசம் 2 இடங்களில் வென்றன. 2-வது தேர்தலிலும் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி 7 இடங்களைப் பெற்றது.
பாஜகவின் வியூகம்
தெலுங்கானா சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற வேண்டும். தெலுங்கானாவில் எப்படியாவது காலூன்றி விட வேண்டும் என்பது பாஜகவின் வியூகம். தெலுங்கானாவில் தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியை சிதைத்துக் கொண்டிருக்கிறது பாஜக. காங்கிரஸ் இடத்துக்கு முன்னேறியாக வேண்டும் என்பது பாஜகவின் நிலைப்பாடு.
பாஜக எதிர்ப்பில் உறுதி
தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்க முயற்சிகளை எடுத்தார் சந்திரசேகர ராவ். திடீரென இந்த முயற்சிகளை கிடப்பில் போட்டதால் அவர் பாஜகவின் பி டீம் என்கிற விமர்சனம் எழுந்தது. ஆனால் இதனை திட்டவட்டமாக மறுத்த சந்திரசேக ராவ், பாஜக எதிர்ப்பு நிலைப்பாட்டில் தீவிரம் காட்டினார். பாஜகவை தெலுங்கானாவில் காலூன்ற விடமாட்டோம் என தொடர்ந்து பேசி வருகிறார்.இந்நிலையில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை சந்திரசேகர ராவ் சந்தித்தும் பேசினார்.
முன்கூட்டியே தேர்தல்
இந்த பின்னணியில் பாஜகவை மாநிலத்தில் தடுத்து நிறுத்த, அதன் வியூகங்களுக்கு முட்டுக்கட்டை போட முன்கூட்டியே தேர்தலை நடத்தலாம் என சந்திரசேகர ராவ் ஆலோசித்து வருகிறாராம். கர்நாடகா சட்டசபைக்கு அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. அப்போது தெலுங்கானாவுக்கும் தேர்தல் நடத்தலாம் என்பதுதான் சந்திரசேக ராவின் வியூகம் என்கின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள்.