நிர்மலா சீதாராமனுக்கு கடும் எதிர்ப்பு! கார் தடுத்து நிறுத்தம்! பாஜக-காங்கிரஸ் மோதல்! பரபர ஐதராபாத்
ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் காரை முற்றுகையிட முயன்றதால் காங்கிரஸ், பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமீதி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சந்திரசேகர ராவ் உள்ளார். இந்த மாநிலத்துக்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் தான் சமீப காலமாக சந்திரசேகரராவ், பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். பொது மேடைகளில் பிரதமர் நரேந்திர மோடியை தாக்கி பேசி வருகிறார். அதோடு 2024 பொதுத்தேர்தலில் பாஜகவுக்கு எதிராக மத்தியில் மாபெரும் கூட்டணியை அமைக்க திட்டமிட்டு அதற்காக பல்வேறு தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார்.

பாஜக வியூகம்
இதேபோல் பாஜகவும், சந்திரசேகரராவுக்கு பாடம் கற்பிக்க முடிவு செய்துள்ளது. அதோடு தெலுங்கானாவில் பாஜக காலூன்ற திட்டமிட்டு அதற்கான வியூகத்தை வகுத்து வுருகிறது. அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தலில் சந்திரசேகரராவை வீழ்த்த பாஜக திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக சமீபத்தில்பாஜகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் என்பது தெலுங்கானாவில் நடத்தப்பட்டது.

நிர்மலா சீதாராமன் வருகை
மேலும் பாஜக தலைவர்கள் அவ்வப்போது தெலுங்கானா சென்று வியூகங்கள் வகுத்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெலுங்கானா சென்றதோடு, ஆர்ஆர்ஆர் நடிகர் ஹூனியர் என்டிஆரை சந்தித்து பேசினார். இதன் தொடர்ச்சியாக இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெலுங்கானா மாநிலம் காமாரெட்டி மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார்.

காங்கிரஸ் மறியல் போராட்டம்
நிர்மலா சீதாராமன் ஜஹீராபாத்திலிருந்து காமரெட்டி மாவட்டத்தில் உள்ள பன்ஸ்வாராவுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். இந்த வேளையில் திடீரென்று இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் கோஷமிட்டு மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து நிர்மலா சீதாராமன் உள்பட பிற வாகனங்கள் நிறுத்தப்பட்டன.

பாஜக-காங்கிரஸ் கட்சியினர் மோதல்
இதையடுத்து பாதுகாப்பு பணிக்காக நின்ற போலீசார் உடனடியாக காங்கிரஸ் கட்சியினரை அப்புறப்படுத்தினர். மேலும் அங்கு வந்த பாஜகவினர் காங்கிரஸ் கட்சியினரிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்டது. இதில் சிலர் காயமடைந்தனர்.

காங்கிரஸ் கட்சியினர் கைது
இதையடுத்து அங்கு இருந்த போலீசார் பிரச்சனையை தீர்த்தனர். அதோடு மறியலில் ஈடுபட்டதாக கூறி காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். பாஜகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தெலுங்கானாவில் இன்று பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications