எங்க தடுப்பு மருந்தின் தாக்கம் ஓர் ஆண்டு வரை இருக்கும்... இந்திய நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு
ஹைதராபாத்: தங்கள் கோவாக்சின் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டவர்களின் உடலில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பாற்றால் ஆறு முதல் ஒரு ஆண்டு வரை இருக்கும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனாவுக்கு ஃபைஸர், மாடர்னா உள்ளிட்ட நிறுவனங்கள் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளன. பிரிட்டன், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் அந்த தடுப்பு மருந்துகளின் அவசர பயன்பாட்டிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளன.

தடுப்பு மருந்து ஆய்வில் இந்திய நிறுவனம்
அதேபோல இந்தியாவிலும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் ஆய்வுகளைப் பல நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்து ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து கோவாக்சின் என்ற தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது.

தொடரும் சோதனை
கோவாக்சின் தடுப்பு மருந்தின் முதல் இரண்டு கட்ட சோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம் தற்போது ஐஎம்சிஆர் மற்றும் தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து மூன்றாம்கட்ட மருத்து பரிசோதனைகளை நடத்தி வருகிறது. இந்த மூன்றாம்கட்ட பரிசோதனையும் வெற்றிகரமாக முடியும்பட்சத்தில் இந்தத் தடுப்பு மருந்திற்கு விரைவில் அனுமதியளிக்கப்படும்.

தடுப்பாற்றால் நீண்ட காலம் இருக்கும்
இந்நிலையில் தற்போது கோவாக்சின் தடுப்பு மருந்தின் முதல் இரண்டு கட்ட சோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்தத் தடுப்பு மருந்து அதிக காலம் நீடிக்கும் தேவையான தடுப்பாற்றலை உடலில் உருவாக்குவதாக முதல்கட்ட சோதனை முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தடுப்பு மருந்தின் இரண்டு டோஸ்களையும் எடுத்துக் கொண்ட ஒருவரின் உடலில் உருவாகும் ஆன்ட்டிபாடிகள் அதிகபட்ச நிலையிலேயே மூன்று மாதங்கள் வரை நீடிப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.

மிகவும் பாதுகாப்பானது
குழந்தைகள், இளைஞர்கள் என மொத்தம் 380 பேருக்கு இரண்டாம்கட்ட மருந்து சோதனையில் இந்தத் தடுப்பு மருந்து வழங்கப்பட்டது. இவர்களுக்கு நான்கு வார இடைவெளியில் இரண்டு தடுப்பு மருந்து டோஸ்கள் வழங்கப்பட்டன. இரண்டாம்கட்ட சோதனையில் இந்தத் தடுப்பு மருந்து மிகவும் பாதுகாப்பானது என்றும் தேவையான தடுப்பாற்றலை தூண்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓர் ஆண்டு நீடிக்கும் தடுப்பாற்றல்
இந்த சோதனை முடிவுகள் குறித்து பாரத் பயோடெக், "இந்த முடிவுகளின் அடிப்படையில், எங்கள் தடுப்பு மருந்து 6 முதல் 12 மாதங்களுக்கு நீடிக்கக்கூடிய ஆன்ட்டிபாடிகளை உருவாக்கும் என்று நாங்கள் கருதுகிறோம். இந்தக் காலகட்டத்தில் கொரோனாவை தடுக்கும் தடுப்பாற்றலை எங்கள் தடுப்பு மருந்து உடலில் உற்பத்தி செய்கிறது. மேலும், தடுப்பு மருந்து செலுத்தப்பட்டவர்களில் யாருக்கும் மோசமான பக்கவிளைவுகள் கண்டறியப்படவில்லை" என்று கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications