பெண்ணாக இருந்து ஆணாக மாறிய ஐஆர்எஸ் அதிகாரி.. மத்திய அரசு அனுமதித்தது எப்படி! இதற்கான ரூல்ஸ் என்ன?
ஹைதராபாத்: தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் பணியாற்றி வரும் ஐஆர்எஸ் அதிகாரி ஒருவர் தனது அனைத்து அதிகாரப்பூர்வ பதிவுகளிலும் பெயர் மற்றும் பாலினத்தை மாற்ற மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அவர் பெண்ணாக இருந்து ஆணாக மாறியுள்ளார். இதுபோல அரசு அதிகாரிகள் தங்கள் பாலினத்தை மாற்றிக் கொள்ள அனுமதி வழங்கப்படுவது இதுவே முதல்முறை.. இதற்கான சட்டம் என்ன.. அனுமதி வழங்கப்பட்டது எப்படி என்பது குறித்துப் பார்க்கலாம்.
உலகில் பல்வேறு நாடுகளிலும் இன்னும் மாற்றுப் பாலினத்தவர்களுக்கு உரிய மரியாதையும் அங்கீகாரமும் கிடைப்பதில்லை. அதேபோல பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர்கள், ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர்களுக்கும் இதே நிலை தான்.

ஐஆர்எஸ் அதிகாரி: இருப்பினும், அவர்களுக்கும் உரிய மரியாதை மற்றும் அங்கீகாரம் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே நமது நாட்டில் முதன்முறையாக, ஹைதராபாத்தில் வேலை பார்த்து வரும் மூத்த இந்திய வருவாய்த் துறை (ஐஆர்எஸ்) அதிகாரி தனது அனைத்து அதிகாரப்பூர்வ பதிவுகளிலும் பெயர் மற்றும் பாலினத்தை மாற்றிக் கொள்ள நிதி அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
எம் அனுசுயா என்று இருக்கும் தனது பெயரை எம் அனுகதிர் சூர்யா என்றும், பாலினத்தைப் பெண்ணிலிருந்து ஆணாகவும் மாற்ற அனுமதி கோரி அந்த அதிகாரி கோரிக்கை விடுத்திருந்தார். அதை ஏற்று மத்திய அரசு இப்போது அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
மத்திய அரசு அனுமதி: இந்த உத்தரவில், "எம் அனுசுயா, ஐஆர்எஸ் C&IT: 2013, DOB: 20.10.1988] தற்போது இணை ஆணையராக ஹைதராபாத்தில் உள்ள தலைமை ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். அவர் தனது பெயரை எம் அனுசுயா என்பதில் இருந்து எம் அனுகதிர் சூர்யா என்றும் பாலினத்தைப் பெண்ணிலிருந்து ஆணாகவும் மாற்றுமாறு கோரியுள்ளார்.
அந்த அதிகாரியின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.. இனிமேல் அனைத்து அதிகாரப்பூர்வ பதிவுகளிலும் அந்த அதிகாரி 'மிஸ்டர் எம் அனுகதிர் சூர்யா' என்றே அழைக்கப்படுவார். உரிய அனுமதியுடன் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
யார் இந்த அதிகாரி: இந்த ஐஆர்எஸ் அதிகாரி 2013இல் சென்னையில் உதவி ஆணையராக பணியில் சேர்ந்தார். 2018இல் அவர் துணை ஆணையராகப் பதவி உயர்வு பெற்றார். கடந்த 2023 ஜனவரி முதல் அவர் தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் இணை ஆணையராகப் பணியாற்றி வருகிறார்.
மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்ற இவர், போபாலில் உள்ள தேசிய சட்ட நிறுவனம் பல்கலைக்கழகத்தில் சைபர் சட்டம் மற்றும் சைபர் தடயவியல் துறையில் முதுகலைப் பட்டயப் படிப்பை முடித்துள்ளார். இவர் தான் இப்போது தனது பெயர் மற்றும் பாலினத்தை மாற்றியுள்ளார்,
அனுமதி வழங்கப்பட்டது எப்படி: முன்னதாக திருநங்கைகளை மூன்றாம் பாலினத்தவராக அங்கீகரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து கடந்த 2015ஆம் ஆண்டில் ஒடிசா அரசு அதிகாரி ஒருவர் தனது பாலின அடையாளத்தை மூன்றாம் பாலினத்தவராக சட்டப்பூர்வமாக மாற்றினார். ஒடிசாவில் பணியாற்றி வந்த ரதிகாந்த பிரதான் என்பவர் கடந்த 2015இல் ஐஸ்வர்யா ருதுபர்ண பிரதான் ஆனார். ஒடிசா நிதித் துறையில் வேலை செய்யும் பிரதான், இந்தியாவின் முதல் திருநங்கை அரசு ஊழியர் ஆவார். இதை முன்னுதாரணமாகக் கொண்டே சூர்யாவுக்கும் மத்திய அரசு அனுமதித்துள்ளது
சட்டம் என்ன: மேலும், திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019இன்படி திருநங்கைகள் தங்கள் பாலினத்தை மாற்றிக் கொள்ளவும், அவர்களின் அடையாளத்தை அங்கீகரிக்கவும் சட்டம் அனுமதிக்கிறது. இச்சட்டம் ஒரு திருநங்கை பிறக்கும் போது இருக்கும் பாலினத்திலிருந்து மாறுவதை அங்கீகரிக்கிறது.












Click it and Unblock the Notifications