நபிகள் நாயகம் மீதான அவதூறு சரியா? உங்க முஸ்லிம் நண்பர் அப்பாஸிடம் கேளுங்க மோடி - ஒவைசி
ஐதராபாத்: பிரதமர் நரேந்திர மோடி தனது நண்பர் அப்பாஸிடம் நுபுர் ஷர்மா நபிகள் நாயகம் குறித்து தெரிவித்த கருத்து சரிதானா என்பதை கேட்க வேண்டும் என அசதுத்தீன் ஒவைசி தெரிவித்து உள்ளார்.
தனது தாயார் ஹீராபாயின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு தனது சிறுவயது நினைவுகள் குறித்தும் தனது தாய் ஹீராபாய் பற்றியும் நெகிழ்ச்சியோடு சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.
அதில், "எனது தந்தையுடைய முஸ்லிம் நண்பர் ஒருவர் எதிர்பாராதவிதமாக உயிரிழந்துவிட்டார். அவரது மகன் பெயர் அப்பாஸ். அப்பாஸை எனது தந்தை வீட்டுக்கு அழைத்து வந்தார்.

மோடியின் முஸ்லிம் நண்பர்
அப்பாஸ் எங்கள் வீட்டில்தான் தங்கி படித்தார். என் அம்மா என்னிடமும், என் சகோதர சகோதரிகளிடமும் அன்பு காட்டுவதை போன்றே அப்பாஸிடமும் அன்போடு இருந்து அவரை வளர்த்தார். ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் பண்டிகையின்போது அப்பாஸுக்கு பிடித்தமான பலகாரங்களை என் தாயார் செய்து கொடுப்பார்." என்று தெரிவித்து இருந்தார்.

ஒவைசி கேள்வி
இந்த நிலையில், ஐதராபாத்தில் பேசிய ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும் எம்.பியுமான அசதுத்தீன் ஒவைசி, "8 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி தனது நண்பரை பற்றி பேசியுள்ளார். பிரதமருக்கு இப்படி ஒரு நண்பர் இருந்ததை இதுவரை நான் அறியவில்லை. பிரதமர் தனது நண்பர் அப்பாஸுக்கு போன் செய்து எங்கள் பேச்சை கேட்டு அது பொய்யா என்று கேளுங்கள். அத்துடன் நுபுர் ஷர்மா நபிகள் நாயகம் குறித்து தெரிவித்த கருத்து சரிதானா என்பதையும் கேளுங்கள் என்றார்.

நுபுர் ஷர்மாவின் சர்ச்சை கருத்து
சர்ச்சைக்குரிய பேச்சுக்களால் புகழ்பெற்ற பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, அண்மையில் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதில் பேசிய நுபுர் ஷர்மா இறைத்தூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசினார். அதேபோல் அக்கட்சியின் நவீன் குமார் ஜிண்டாலும் முஹம்மது நபி குறித்து ட்விட்டரில் அவதூறாக கருத்திட்டார்.

வழக்குப்பதிவு
நுபுர் ஷர்மாவின் இந்த கருத்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. மும்பையில் நுபுர் ஷர்மா மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இது தொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் மும்பை போலீஸ் திட்டமிட்டு இருக்கிறது. இதேபோல் டெல்லி, கொல்கத்தா போலீசும் நுபுர் சர்மா மீது வழக்குப்பதிவு செய்து இருக்கிறது.

இஸ்லாமிய நாடுகள் எதிர்ப்பு
இந்த நிலையில் நுபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குறிய பேச்சு அரபு நாடுகளிலும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சவூதி அரேபியா, ஈரான் அமீரகம், குவைத், கத்தார், ஓமன் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட நாடுகள், இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பு ஆகிய இந்தியாவில் நடக்கும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்தும், பாஜக பிரமுகரின் பேச்சுக்கும் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர். அரபு நாட்டு மக்கள் ட்விட்டரில் #Boycott India என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications