லெக்பீஸ காணோம்.. கொதித்தெழுந்த பிரியாணி பிரியர்.. ஒரே ஒரு டிவீட்டில் அமைச்சரையே பதில் தர வெச்சுடாரு!
தனது பிரியாணியில் லெக்பீஸ் இல்லை என தெலுங்கானா அமைச்சரிடம் புகார் செய்துள்ளார் நெட்டிசன் ஒருவர்.
ஹைதராபாத்: தான் ஆர்டர் செய்த சிக்கன் பிரியாணியில் லெக் பீஸ் இல்லையென அமைச்சரிடம் புகார் செய்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் தெலுங்கானாவை சேர்ந்த நபர் ஒருவர்.
பிரியாணியை பிடிக்காதவர்கள் இல்லை என்றே சொல்லிவிடலாம். அந்தளவுக்கு ஒரு பிரபலமான, பிடித்தமான உணவாகிவிட்டது பிரியாணி. ஒரு சாலையில் 10, 15 பிரியாணி கடைகள் திறக்கப்பட்டாலும், அனைத்திலும் கூட்டம் நிரம்பி வழியத்தான் செய்கிறது.
சிக்கன் தம் பிரியாணி, மட்டம் மண்டி பிரியாணி, ஹைதராபாதி பிரியாணி என பிரியாணியில் தான் எத்தனை விதங்கள் கிடைக்கின்றன. மூன்று வேளை பிரியாணி கொடுத்தாலும் மூக்குபிடிக்க சாப்பிடலாம் என சொல்லும் அளவுக்கு மவுசு பெருகிவிட்டது பிரியாணிக்கு.
கொரோனாவிற்கு சிக்கன் சாப்பிட்டால் நல்லது எனக் கூறினால்கூட, நம்மவர்கள் கவனம் உடனே சிக்கன் பிரியாணி பக்கம் தான் செல்லும். அந்தளவிற்கு பிரியாணிக்கு இங்கு ரசிகர்கள் அதிகம்.

ஆன்லைன் பிரியாணி
தெலுங்கானாவை சேர்ந்த அப்படிப்பட்ட ஒரு பிரியாணி பிரியர் சம்பவத்தன்று ஆன்லைன் மூலம் பிரியாணி ஆர்டர் செய்திருக்கிறார். அதில் சிக்கன் லெக்பீஸ் வேண்டும் என்றும், கூடுதல் மசாலா வேண்டும் என்றும் அவர் ஆர்டர் செய்திருக்கிறார். ஆனால் அவருக்கு வந்த பிரியாணியில் அவை இரண்டுமே இல்லை என்பதை அறிந்து மிகவும் கொந்தளித்துவிட்டார்.

மிஸ்ஸான லெக்பீஸ்
இதையடுத்து அவர் அந்த பிரியாணியை புகைப்படம் எடுத்து டிவிட்டரில் பதிவிட்டு, "லெக்பீஸ் மற்றும் கூடுதல் மசாலா சேர்த்து சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்தேன். ஆனால் அதில் இரண்டுமே இல்லை. இது தான் நீங்கள் மக்களுக்கு சேவை செய்யும் லட்சணமா", என கேட்டு, சொமேட்டோவையும், கூடவே தெலுங்கானா அரசின் உள்ளாட்சித்துறை அமைச்சரும், முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகனுமான கே.டி. ராமா ராவையும் சேர்த்து டேக் செய்தார். இதைப்பார்த்த அனைவரும் அதிர்ந்து போய்விட்டனர்.

உள்ளாட்சித்துறை அமைச்சர்
இந்த டிவீட் அமைச்சரின் கவனத்திற்கும் சென்றது. டிவீட்டைப் பார்த்த அமைச்சர் கேடி ராமா ராவ், "இதில் என்னை ஏன் பிரதர் டேக் செய்தீர்கள்? நான் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?", என கூலாக பதில் டிவீட் செய்துள்ளார். அவரது இந்த ரியாக்ஷனை நெட்டிசன்கள் ரசித்து வருகின்றனர்.

பிரியாணியின் சக்தி
'அமைச்சரையே கேள்வி கேட்க தூண்டுவது தான் பிரியாணியின் சக்தி, 'நாடி நரம்பிலெல்லாம் பிரியாணியின் சுவை ஊறியவரால தான் இப்டி யோசிக்க முடியும்' என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். அமைச்சர் பதில் அளித்த சற்று நேரத்தில் தான் பதிவிட்ட டிவீட்டை நீக்கிவிட்டார் சம்பந்தப்பட்ட நபர். இருந்தாலும் இந்த விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications