ஆளுநர் தமிழிசையை சந்தித்த கேசிஆர்.. 52 நாள் போராட்டத்தை கைவிட்ட பேருந்து ஊழியர்கள்.. என்ன நடந்தது?
தெலுங்கானாவில் வேலை நிறுத்த போராட்டம் செய்து வந்த போக்குவரத்து ஊழியர்கள் இன்று மாலை தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
ஹைதராபாத்: தெலுங்கானாவில் வேலை நிறுத்த போராட்டம் செய்து வந்த போக்குவரத்து ஊழியர்கள் இன்று மாலை தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
கடந்த 52 நாட்களாக தெலுங்கானா சாலை போக்குவரத்து கழகம் சார்பாக வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வந்தது. சம்பள உயர்வு, போக்குவரத்து கழகத்தை அரசுடன் இணைத்து தங்களை அரசு ஊழியர்களாக மாற்ற வேண்டும், ஓய்வு ஊதியத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட 26 கோரிக்கைகளை முன் வைத்து இந்த போராட்டம் நடந்து வந்தது.

அக்டோபர் மாதம் 4ம் தேதி தொடங்கிய போராட்டம் இன்று வரை வந்தது. அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் இந்த போராட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். அவர் ஊழியர்களின் கோரிக்கையை ஏற்க முடியாது என்றும் உறுதியாக கூறிவிட்டார். இதனால் போராட்டம் தொடர்ந்து நடந்தது.
அதோடு தெலுங்கானா போக்குவரத்து கழக ஊழியர்கள் 48000 பேரை ஒரே கையெழுத்தில் வேலையைவிட்டு நீக்கி உள்ளார். தெலுங்கானா போக்குவரத்து கழகத்தை 50% தனியார் மயமாக்க சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளார். இதற்கான அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். அதன்படி 10400 பேருந்துகளில் 5100 பேருந்துகளை தனியார் இயக்கலாம் என்று அவர் கூறி இருக்கிறார்.
இந்த நிலையில் இன்று அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் சந்தித்தார். அதில் அவர் போக்குவரத்து துறையை தனியார் மயமாக்குவது குறித்து பேசினார். இதனால் பேருந்து ஊழியர்கள் தங்கள் பணி மொத்தமாக போகும் என்று அச்சம் அடைந்தனர்.
இதையடுத்து தற்போது போராட்டத்தை கைவிடுவதாக ஊழியர்கள் அறிவித்துள்ளனர். போக்குவரத்து துறையை தனியார்மயமாக்க கூடாது. அதை தடுக்கும் வகையில் போராட்டத்தை கைவிட்டு இருக்கிறோம். நாளையே நாங்கள் பணிக்கு திரும்புவோம். ஆனால் அரசுக்கு தொடர்ந்து எங்கள் கோரிக்கையை வைத்து வருவோம் என்று ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications