தெலுங்கானா நீச்சல் குளத்தில் தாய், மகள்கள் இருந்த கோலம்.. மாமனாருக்கு சந்தேகம்.. மருமகனிடம் விசாரணை
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் ஒரு தாய் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளுக்கும் நீச்சல் நன்கு தெரியும்.. ஆனால் நீச்சல் குளத்தில் அவர்களது உடல்கள் மிதந்துள்ளது. அந்த நீச்சல் குளம் அவர்களுக்கு சொந்தமானது தான். அங்கு அவர்களின் அந்த கோலம் குறித்து போலீசார் விசாரிக்கிறார்கள். குறிப்பாக தனது மகள் மற்றும் பேத்திகளுக்கு என்ன நடந்தது என்று அறிய விரும்பிய நபர், தனது மருமகன் மீது சந்தேகம் உள்ளதாக புகார் அளித்துள்ளார். இதன்படி விசாரித்து வருகிறார்கள்.
தெலுங்கானா மாநிலம் ஹனுமகொண்டா மாவட்டத்தில் உள்ளது பொன்னேலு கிராமம். இங்கு அசாருதீன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி பர்ஹத். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். உமேரா (8) ஆயிஷா (6) ஆகிய இருவரும் அருகே உள்ள பள்ளியில் படித்து வந்தனர். அசாருதீன் அந்த பகுதியில் நீச்சல் குளம் ஒன்றை நடத்தி வருகிறார் . அந்த நீச்சல் குளம் தான் அசாருதீன், பர்ஹத் தம்பதிக்கு வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. இந்நிலையில் நீச்சல் குளத்தில் நேற்று காலை நீச்சல் குளத்தில் பர்ஹத் மற்றும் , அவரது 2 குழந்தைகளும் பிணமாக மிதப்பதாக போலீசாருக்குத் தகவல் வந்தது.

இதையடுத்து போலீசார் விரைந்து வந்தனர். அங்கு இறந்த மூன்று பேரின் உடல்களைக் கைப்பற்றினர். உடல்களைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணையில் இறங்கினர். அப்போது நடத்திய விசாரணையில் அசாருதீனின் மனைவி பர்ஹத்துக்கு ஏற்கனவே நீச்சல் தெரியும். நீச்சல் குளம் சொந்தமாக இருந்ததால் தங்கள் குழந்தைகளான உமேரா ஆயிஷா ஆகியோருக்கும் சிறுவயதிலேயே நீச்சல் சொல்லிக் கொடுத்துவிட்டனர்.
மூவருக்கும் நீச்சல் தெரிந்த நிலையிலும் அவர்கள் நீச்சல் குளத்தில் இறந்து கிடந்தது போலீசாருக்கு சந்தேகத்தை அதிகமாக்கி உள்ளது. பர்ஹத் சமீபத்தில் மூன்றாவது முறையாகக் கர்ப்பம் அடைந்திருந்தார். இது தொடர்பாகக் கணவன்-மனைவி இடையே தகராறு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இதனால் தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாகவும், மருமகன் அசாருதீன் மீது சந்தேகம் இருப்பதாகவும் பர்ஹத்தின் தந்தை புகார் அளித்துள்ளார். இதுகுறித்து சந்தேக மரணம் என்ற வகையில் வழக்கு பதிவு செய்த போலீசார் அது குறித்து அசாருதீனிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போலீசார் மற்றும் மாமனாரின் சந்தேகங்களுக்கு காரணம் இல்லாமல் இல்லை... உயிரிழந்த பர்ஹத் மற்றும் அவரது 8, 6 வயது குழந்தைகளுக்கு நன்றாக நீச்சல் தெரியும் . பொதுவாக, நீச்சல் தெரிந்தவர்கள் தங்களுக்குப் பழகிய, தங்களுக்குச் சொந்தமான நீச்சல் குளத்திலேயே மூழ்கி இறப்பது என்பது இயல்பாக நடக்க வாய்ப்பு மிகக் குறைவு. அதுவும் ஒரு நபர் எதிர்பாராமல் மூழ்கினால் மற்றவர் காப்பாற்ற முயன்றிருக்கலாம். ஆனால் மூன்று பேருமே ஒரே நேரத்தில் உயிரிழந்திருப்பது ஏதோ ஒரு அசாதாரணமான சூழலை உணர்த்துகிறது எனவே போலீசார் விசாரிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications