நாய்ப் பால் குடித்து வளரும் ஜார்க்கண்ட் சிறுவன்.. கவலையில் பெற்றோர்!
தன்பாத்: ஜார்க்கண்ட்டில் வாய் பேச முடியாத 10 வயது சிறுவன் தெரு நாய்களின் பாலை குடிக்கும் பழக்கம் உள்ளவராக இருப்பது அவரின் பெற்றோரை கவலை அடைய வைத்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தன்பாத் நகரை சேர்ந்தவர் சுபேதார் சிங். பழ வியாபாரி. அவரது மனைவி பிங்கி குமாரி. வீடுகளில் வேலை செய்து வருகிறார். அவர்களின் மகன் மோஹித் குமார்(10). பிறவியிலேயே வாய் பேச முடியாதவர்.
மோஹித்துக்கு ஒரு வித்தியாசமான பழக்கம் உள்ளது.
நாய்ப் பால்
மோஹித்துக்கு 4 வயது இருக்கும்போது தெருவில் சென்ற பெண் நாயிடம் சென்று அதன் பாலை குடித்துள்ளார். அதில் இருந்து அவர் இன்று வரை தெரு நாய்களின் பாலை குடித்து வருகிறார்.
பெற்றோர்
மோஹித் நாய்களிடம் பால் குடிப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் இது குறித்து அவரின் பெற்றோரிடம் தெரிவித்தனர். அவர்களும் எவ்வளவோ கட்டுப்படுத்தியும் மோஹித் நாய்களை தேடிச் சென்று பால் குடிக்கிறார்.
நாய்களும்
மோஹித் வசிக்கும் மனைதாந்த் பகுதியில் உள்ள தெரு நாய்களும் அவர் வந்து பால் குடித்தால் அவரை கடிக்காமல் அமைதியாக உள்ளன. இந்நிலையில் அவர் பக்கத்து பகுதிக்கு சென்று பால் குடிக்க முயன்றபோது அந்த நாய் அவரை கடித்துவிட்டது.
பயம்
மோஹித்தின் நாய்ப் பால்குடியை மறக்கடிக்க அவரது பெற்றோர் அவரை பள்ளிக்கு கூட அனுப்பி வைக்கவில்லை. இருப்பினும் அவர் பெற்றோருக்கு தெரியாமல் சென்று நாய்களிடம் பால் குடிக்கிறார். இந்த குறைபாட்டிற்கு சிகிச்சை அளிக்க மோஹித்தின் பெற்றோரிடம் வசதி இல்லை.