கோரக்பூர் ரயில் விபத்து: 12 பேர் பலி; 45 பேர் படுகாயம்
லக்னௌ: உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் ரயில் நிலையம் அருகே நேற்று இரவு இரு பயணிகள் ரயில்கள் மோதியதில் 12பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 45பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிரிஷாக் எக்ஸ்பிரஸ் வாரணாசியிலிருந்து கோரக்பூருக்கு சென்றுகொண்டிருந்தது. அப்போது லக்னோவிலிருந்து பராவ்னி பின்னால் சென்றுகொண்டிருந்தது. அப்போது நடந்த மோதலில் பராவ்னி எக்ஸ்பிரஸ் ரயிலில் 3 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு தூக்கி எறியப்பட்டன.
12 பேர் பலி
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 12 பேர் உயிரிழந்துவிட்டனர். 45-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். வீரர்கள் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர்.
விபத்துக்கு காரணம்
கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோரக்பூர் நகரில் நேற்றிரவு 10:45 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ரயிலின் வழித்தடத்தை மாற்றுகையில் இவ்விபத்து நேரிட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
போக்குவரத்து பாதிப்பு
இச்சம்பவத்தால் கோரக்பூர்-வாரணாசி பாதையில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் காயமடைந்தவர்களுக்கு ரூ.25ஆயிரமும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ50 ஆயிரமும் இழப்பீடாக வழங்க அறிவித்துள்ளது.
சதானந்த கவுடா இரங்கல்
ரயில் விபத்தில், பலியானவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக, மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் சதானந்த கவுடா கூறியுள்ளார். துரித மீட்பு மற்றும் நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் கூறினார்.