கர்நாடகாவின் கறுப்பு வெள்ளி... கடன் சுமையால் ஒரே நாளில் 13 விவசாயிகள் தற்கொலை
பெங்களூரு: கர்நாடகாவில் ஒரே நாளில் 13 விவசாயிகள் கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தற்கொலைகள் அம்மாநில ஆளும் காங்கிரஸ் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை தொடர் கதையாகி வருகிறது. இந்த விவகாரத்தை முதல்வர் சித்தராமையா சரியாகக் கையாளவில்லை என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.
அத்துடன் கர்நாடகாவில் சுற்றுப் பயணம் செய்து விவசாயிகளை சந்திக்கவும் ராகுல் திட்டமிட்டிருக்கிறார். இதற்கு முன்னதாக அந்த மாவட்டங்களுக்கு நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்து வருமாறு தமிழகத்தைச் சேர்ந்தவரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளருமான டாக்டர் செல்லக்குமாரை பெங்களூருவுக்கும் ராகுல் அனுப்பி வைத்தார்.
ஆனால் ராகுலின் வருகையை விரும்பாத சித்தராமையா செல்லக்குமாருக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று செய்திகள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் கர்நாடகாவில் நேற்று வெள்ளிக்கிழமையன்று ஒரே நாளில் 13 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராம்நகர், மைசூரு, சாம்ராஜ்நகர், பெலகாவி, விஜயபுரா, பெல்லாரி, ஹாசன் மற்றும் மாண்டியா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளே தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் கடன்சுமையாலேயே தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குகள் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து விவசாயிகள் தற்கொலை செய்து கொளவது அம்மாநில ஆளும் காங்கிரஸ் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.