உத்தரகாண்ட்: பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 16 பேர் பலி
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் தெஹ்ரி மாவட்டத்தில் பயணிகள் பஸ் ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்ததில் 16 பேர் பலியாகியுள்ளனர். ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
ஹரித்துவாரில் இருந்து கர்னபிரயாக் பகுதிக்கு 33 பயணிகளுடன் பேருந்து சென்றுகொண்டிருந்தது. தெஹ்ரி மாவட்டம் ஜுயால்கர் அருகே சென்றபோது முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்வதற்காக டிரைவர் முயன்றார்.
அப்போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து 300 அடி பள்ளத்தாக்கில் பாய்ந்து விழுந்தது. இதில் பேருந்து உருக்குலைந்தது. அத்துடன் பேருந்தின் பாதி பகுதி ஓடை நீரில் மூழ்கியது.இந்த கோர விபத்தில் 16 பேர் இறந்தனர்.
சிதைந்து கிடந்த பேருந்தில் இருந்து 17 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் 2 பேர் லேசான காயமடைந்திருந்ததால் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினர். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த மாநில முதல்வர் ஹரிஷ் ராவத், இறந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.