மும்பை கமலா மில்ஸ் தீவிபத்து... சிபிஐ விசாரணை கோரும் 18 வயது மாணவர்
மும்பை கமலா மில்ஸ் வளாகத்தில் நடைபெற்ற தீவிபத்து சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று 18 வயது மாணவர் வலியுறுத்தியுள்ளார்.
மும்பை: மும்பை கமலா மில்ஸ் வளாகத்தில் கடந்த வியாழக்கிழமை தீவிபத்து ஏற்பட்டு 14 உயிர்கள் பலியானதை தொடர்ந்து இந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று 18 வயது மாணவர் கோரியுள்ளார்.
மத்திய மும்பையில் பரேல் பகுதியில் உள்ளது கமலா மில்ஸ். இங்கு ஹோட்டல்கள், பத்திரிகை அலுவலகங்கள் உள்ளிட்ட வணிக வளாகங்களும் இந்த பல அடுக்கு கட்டடத்தில் இயங்கி வருகிறது.
இந்நிலையில் அங்கு 6-ஆவது மாடியில் வியாழக்கிழமை நள்ளிரவு பயங்கர தீவிபத்து நடைபெற்றது. இந்த தீ மளமளவென பரவி கட்டடம் முழுவதும் பரவியது. இதில் 14 பேர் பலியாகிவிட்டனர்.
மேலும் 16 பேர் காயமடைந்தனர். இந்த தீவிபத்து அந்த வளாகத்தில் உள்ள பப் எனப்படும் கேளிக்கை விடுதியில் தீவிபத்து நடந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து அந்த பப்களின் மேலாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். எனினும் பப்களின் உரிமையாளர்கள் இன்னும் தலைமறைவாகவே உள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் சிபிஐ விசாரணை தேவை என்று மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. பிரிட்டனில் படிக்கும் கர்வ் சூட் என்ற மும்பை நகர மாணவன் இந்த வழக்கை தொடுத்துள்ளார்.
அதில் அவர் தனது மனுவில் அவர் கூறுகையில், பப்களின் உரிமையாளர்களின் மீது மட்டும் வழக்கு பதிவு செய்தால் போதாது. இந்த தீவிபத்துக்கு கமலா மில்ஸ் கட்டடத்தின் உரிமையாளர்களுக்கும் சம பங்கு உள்ளது. எனவே இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை என்று தனது மனுவில் கூறியுள்ளார்.