வாரணாசியில் 2,500 நரேந்திரர்கள், 3, 600 அரவிந்த்கள் நாளை வாக்களிக்கின்றனர்
வாரணாசி: லோக்சபா தேர்தலை நாளை எதிர்கொள்ளும் வாரணாசியில் 2,500 நரேந்திரர்கள் மற்றும் 3,600 அரவிந்த்கள் வாக்களிக்க இருக்கின்றனர்.
லோக்சபா தேர்தலின் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நாளை 41 தொகுதிகளில் நடைபெறுகிறது. இதில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் போட்டியிடும் வாரணாசி தொகுதியும் ஒன்று.
இத்தொகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுள்ளது. மொத்தம் 16 லட்சம் வாக்காளர்களைக் கொண்டது வாரணாசி.
இங்குள்ள வாக்காளர்களில் 2,500 பேரின் முதல் பெயர் நரேந்திரர் என்று தொடங்குகிறது. அதேபோல் 3,600 பேரின் பெயர் அரவிந்த் என்று தொடங்குகிறது. போட்டியிடும் வேட்பாளர்களில் நரேந்திர மோடி இல்லாமல் மேலும் இரு வேட்பாளர்களின் பெயர்களும் கூட நரேந்திர என்ற பெயரில்தான் இருக்கிறது.
ஆனாலும் நரேந்திர மோடி அல்லது அரவிந்த் கேஜ்ரிவால் என்ற பெயரில் வாக்காளரோ அல்லது வேறு ஒரு வேட்பாளரோ இல்லை. அதே நேரத்தில் காங்கிரஸ் வேட்பாளரான அஜய் ராய் பெயரில் 15 வாக்காளர்கள் இருக்கின்றனர் அஜய் என முதல் பெயர் கொண்ட வாக்காளர்கள் 16 ஆயிரம் பேர் என்பது குறிப்பிடத்தக்கது.