டெல்லி மெட்ரோ ரயிலை குறி வைக்கும் கட்சிகள்.. ரயில்களில் போஸ்டர் ஒட்ட ரூ. 2 லட்சம்
டெல்லி: மக்களை வளைத்து, வளைத்து நேரடியாக பிரச்சாரம் செய்தது போதவில்லை என்று தற்போது அரசியல் கட்சிகள் டெல்லியில் "மெட்ரோ" ரயில்களில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.
டெல்லியில் ஓடும் மெட்ரோ ரயில்களின் உட்புறம் பா.ஜ.க வின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியின் புகைப்படத்துடன் கூடிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இந்த மாதம் 7 ஆம் தேதி துவங்கி ஒன்பது கட்டங்களாக நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்காக கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் களைக் கட்ட துவங்கியுள்ளது.
வீடு வீடாய் சென்று ஓட்டு:
டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளில் வரும் 10 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி களின் வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று ஓட்டு கேட்டு வருகின்றனர்.
2 லட்சம் பயணிகள்:
டெல்லி மெட்ரோ ரயில்களில் தினமும் 2 லட்சம் பேர் பயணிக்கின்றனர். இதனால் மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன்கள் மற்றும் ரயில் பெட்டிகளின் உள்ளேயும் பிரசாரம் செய்யப்படுகின்றன.
ஒரு ரயிலுக்கு 2 லட்சம்:
ரயில் பெட்டிகளின் உள்ளே அரசியல் கட்சிகளின் போஸ்டர்களை ஒட்டுவதற்கு அல்லது பொருத்துவதற்கு ஒரு ரயிலுக்கு இரண்டு லட்சம் ரூபாய் என்ற அளவில் வசூலிக்கப்படுகிறது.
பா.ஜ.க முதலிடம்:
இந்த ரயில் வண்டி பிரசாரத்தில் பா.ஜ.க தான் முதலிடம் வகிக்கிறது. இக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் கிட்டதட்ட 3,400 போஸ்டர்கள் மெட்ரோ ரயில் பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ளன.
மற்ற கட்சிகளும் மும்முரம்:
இந்த பிரசாரம் மக்களை கவர்ந்துள்ளதால் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியினரும், ரயில்வே அதிகாரிகளை மெட்ரோ ரயில் பிரச்சாரத்திற்காக அணுகியுள்ளனர்.