சசிகலாவிற்கு உதவிய 20 கைதிகள் பெல்லாரிக்கு மாற்றம்.. பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் பரபரப்பு
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து 20 கைதிகள் பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பெங்களூரு: சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா, சிறப்பு சலுகைகளைப் பெற லஞ்சம் கொடுத்தாக எழுந்த புகாரைத் தொடர்ந்து 20 கைதிகள் பெல்லாரி சிறைக்கு இன்று மாற்றப்பட்டுள்ளனர்.
அதிமுக அம்மா கட்சி பொதுச் செயலாளர் சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் இருந்து வருகிறார். அவருடன், அவரது உறவினர்கள் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரும் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளனர்.

இந்நிலையில், சசிகலாவிற்கு சகல வசதிகளும் சிறையில் செய்து கொடுக்க 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக டிஐஜி ரூபா பரபரப்பு புகார் தெரிவித்தார். மேலும், சசிகலாவிற்கு என தனி அலுவலகமே செயல்பட்டு வந்ததாகவும், தனி சமையல் அறை ஏற்படுத்தி கொடுத்தாகவும் ரூபா குற்றம்சாட்டியிருந்தார்.
ரூபாவின் குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், 20 கைதிகளை பெல்லாரி சிறைக்கு சிறைத் துறையினர் மாற்றியுள்ளனர். இந்த 20 பேரும் சசிகலாவிற்கு உதவியவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் தமிழகம் மற்றும் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications