ஏழுமலையான் தரிசனத்திற்கு இனி 24 மணி நேர “ஆன்லைன்” முன்பதிவு – திருப்பதி தேவஸ்தானம்
திருப்பதி: திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் 24 மணி நேரமும் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் என்று புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
திருப்பதி தேவஸ்தான இணையதளம் மூலம் இன்று முதல் 24 மணி நேரமும் பக்தர்கள் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தலைமை செயல் அதிகாரி சாம்பசிவராவ் தெரிவித்துள்ளார்.
திருமலை, திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அதிகாரி சாம்பசிவராவ், தகவல் தொழில்நுட்பத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, "திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் ரூபாய் 300, ரூபாய் 50க்கான டிக்கெட் ஆன்லைன் முன்பதிவு செய்தும், தொழில்நுட்பம் காரணமாக டிக்கெட் கிடைக்காத பக்தர்களுக்கு, அவர்களின் பணம் 3 நாட்களுக்குள் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தும் விதமாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
24 மணி நேரமும் டிக்கெட் முன்பதிவு செய்யும் விதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.
மேலும் ஒரு குடும்பத்தில் 6 பேருக்கு முன்பதிவு செய்யும் போது, பெயர் பட்டியலில் முதலில் உள்ளவரின் புகைப்படம் மற்றும் அடையாள அட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
பின்னர் மீதமுள்ள நபர்களின் புகைப்படம் மட்டும் பதிவிறக்கம் செய்தால் போதுமானதாகும். மேலும் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களின் பெயர் மற்றும் முகவரிகள் ஜூன் 1 ஆம் தேதி முதல் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.