கேரளா: கட்டணம் செலுத்தாத 250 மாணவர்களை அறையில் பூட்டி வைத்த பள்ளி நிர்வாகம் – பெற்றோர் கொதிப்பு
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பள்ளிக் கட்டணம் செலுத்தாததால், 8 வயதுள்ள சுமார் 250 மாணவர்களை தனி அறையில் பூட்டி வைத்து, அவர்களுக்கு குடிநீர் கூட வழங்காமல் தண்டனை அளித்துள்ளது பள்ளி நிர்வாகம். இதனால் கொதிப்பட்ட பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மனருல் ஹுதா அறக்கட்டளை சார்பில் இந்தப் பள்ளி நடத்தப்படுகிறது. சிபிஎஸ்இ பள்ளியின் அங்கீகாரம் கடந்த மார்ச் மாதமே முடிந்து விட்டது. அதை இன்னும் புதுப்பிக்கவில்லை. எனவே தான் கட்டணம் செலுத்த தாமதித்தோம் என்பது பெற்றோர்களின் கருத்தாகும்.

கட்டணம் செலுத்தாத மாணவர்கள் கடந்த திங்கள்கிழமை வகுப்பறைக்கு வெளியே ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டிருந்தனர். அதுதொடர்பாக விசாரிக்க, நேற்று முன்தினம் சில பெற்றோர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர்.
இதுதொடர்பாக பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் ஹதாமுல் நஜு கூறும்போது, "மாணவர்கள் வகுப்பறையில் இருப்பதாக பள்ளி முதல்வர் தெரிவித்தார். ஆனால், ஏராளமான மாணவர்கள் கருத்தரங்கக் கூடத்தில் அடைக்கப்பட்டிருந்தனர்" என்றார்.
ஒருவர் மடியில் ஒருவர்
கருத்தரங்கக் கூடத்தில் அடைக்கப்பட்டதால் மயக்கமடைந்த 8 வயது மாணவி இஷா பாத்திமா கூறும்போது, "எங்களை அடைத்து வைத்திருந்த அறைக்குள் கடும் வெப்பம் நிலவியது. எங்களுக்கு குடிக்க நீர் தர மறுத்துவிட்டனர். உட்காரவும் இடமில்லை. அது தொடர்பாகக் கேட்டபோது, ஒருவர் மடி மீது மற்றவர் அமருங்கள் எனக் கூறிவிட்டனர்" என்றார்.
நிர்வாகம் மறுப்பு
ஆனால் இந்த குற்றச்சாட்டை பள்ளி நிர்வாகம் மறுத்துள்ளது. இது குறித்து கருத்து கூறியுள்ள பள்ளியின் இயக்குநர் டி.எம். அபுபக்கர், "கட்டணம் செலுத்தாத மாணவர்களை கருத்தரங்கக் கூடத்தில் ஒன்று கூடச் சொன்னோம். அவர்களிடம் பள்ளி முதல்வர், கட்டணம் செலுத்துவதற்கான இறுதிநாள் குறித்து பேசவிருந்தார். அப்போது, சில பெற்றோர்கள் பள்ளி மூடப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அந்த கருத்தரங்க அறையின் கதவு ஜன்னல்களை அடைத்து போராட்டம் நடத்தத் தொடங்கினர்" என்றார்.
வழக்குப் பதிவு
கேரள மாநில குழந்தைகள் நல உரிமை ஆணையம் இச்சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி மாவட்ட காவல்துறையைக் கேட்டுக் கொண்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தில், பள்ளி முதல்வர் பி.அப்துல் ரஹ்மான், துணை முதல்வர் கிரிஜா சுரேந்திரன் கணக்காளர் ஷாஜ கான் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications