கேரளாவில் கொட்டித் தீர்க்கும் மழை: 24 மணிநேரத்தில் 26 பேர் பலி
Recommended Video
இடுக்கி: கேரளாவில் கனமழை வெள்ளத்தால் 24 மணிநேரத்தில் 26 பேர் பலியாகியுள்ளனர்.
கேரளாவின் வடக்கு பகுதியில் உள்ள இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு ஆகிய மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. இதனால் மாநிலத்தில் உள்ள 78 அணைகளில் 24 அணைகள் நிரம்பிவிட்டன.
இதையடுத்து மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய நீர்த்தேக்கமான செருத்தோனி அணையின் ஷட்டர் 26 ஆண்டுகளுக்கு பிறகு திறந்துவிடப்பட்டுள்ளது. முன்னதாக எர்ணாகுளத்தில் உள்ள இடமலையார் அணை திறந்துவிடப்பட்டது.
கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. வயநாடு மாவட்டம் வெள்ளத்தில் மிதக்கிறது.
கனமழை, வெள்ளத்தால் 24 மணிநேரத்தில் 26 பேர் பலியாகியுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு அனைத்து உதவிகளும் செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்துள்ளார்.
இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர், பாலக்காடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனம் முதல் மிக கன மழை பெய்து வருகிறது. மக்கள் யாரும் பயப்பட வேண்டாம், தேவையான நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டு வருகிறது என்று கேரள மாநில முதல்வர் பினரயி விஜயன் தெரிவித்துள்ளார்.