2ஜி: அமலாக்கத்துறை வழக்கு- ராசா, கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்குமா?; ஆகஸ்ட் 6ல் தெரியும்
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கு ரூ.200 கோடி லஞ்சம் பெற்றதாக மத்திய அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, திமுக ராஜ்யசபா எம்.பி கனிமொழி உள்பட 10 பேர் மீதான ஜாமீன் மனு மீது ஆகஸ்ட் 6ஆம் தேதி டெல்லி சி.பி.ஐ நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற்றதற்காக ஆதாயம் தேடித் தரும் வகையில், பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து கலைஞர் டி.வி.க்கு முறைகேடாக ரூ.200 கோடி வழங்கப்பட்டதாக மத்திய அமலாக்கப்பிரிவினர் வழக்கு தொடர்ந்தனர்.
டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனி நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்.பி., தயாளு அம்மாள், கலைஞர் டி.வி.யின் மேலாண்மை இயக்குனர் சரத் குமார், பி.அமிர்தம், சுவான் டெலிகாம் புரமோட்டர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சாகித் உஸ்மான் பல்வா, வினோத் கோயங்கா, குசேகான் புரூட்ஸ் அண்டு வெஜிடபிள் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர்கள் ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால், இந்தி திரைப்பட தயாரிப்பாளர் கரீம் மொரானி ஆகிய 10 பேரின் மீதும், சுவான் டெலிகாம், குஸேகோன் ரியல்டி, சினியுக் மீடியா, கலைஞர் டி.வி. டைனமிக் ரியல்டி, எவர்ஸ்மைல் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி, கோன்வுட் கன்ஸ்ட்ரக்ஷன் அண்டு டெவலப்பர்ஸ், டி.பி.ரியல்டி, நிஹார் கன்ஸ்ட்ரக்ஷன் ஆகிய 9 நிறுவனங்களின் மீதும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
இவர்கள் மீது 4 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தனிநீதிமன்றத்தில் கடந்த மே 25ஆம் தேதி அமலாக்கப்பிரிவினர் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 10 பேர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஏற்கனவே முடிவடைந்துள்ளது.
ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோருக்கு இந்த வழக்கில் ஜாமீன் வழங்குவதற்கு மத்திய அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் தொடர்புடைய குற்றங்களுக்கு குறைந்த பட்ச தண்டனையே மூன்றாண்டு காலம் என்பதால் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றங்கள் ஏறக்குறைய நிரூபணம் ஆகும் தறுவாயில் உள்ளதால் இவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்றும் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் தயாளு அம்மாள், கரீம் மொரானி ஆகியோருக்கு ஜாமீன் வழங்குவதை எதிர்க்க மாட்டோம் என்று தனிக்கோர்ட்டில் அமலாக்கப்பிரிவின் சார்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே மீதமுள்ள 9 பேரின் ஜாமீன் மனுக்கள் மீது அமலாக்கப்பிரிவு எதிர்ப்பு தெரிவித்து உள்ளதால் அவர்களுக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், 10 பேரின் ஜாமீன் மனு மீதான வாதம் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் செவ்வாய்கிழமை நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து ஜாமீன் மனு மீது ஆகஸ்ட் 6 ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.