கலைஞர் டிவி பண விவகாரம்.. அமலாக்கப் பிரிவு வழக்கே தவறானது: "ஸ்வான்" பல்வா வாதம்
டெல்லி: கலைஞர் டிவிக்கு ரூ200 கோடி பணம் கொடுத்ததில் அன்னிய செலாவணி விதிகள் மீறப்பட்டிருப்பதாக கூறி அமலாக்கப் பிரிவு வழக்கு தொடர்ந்ததே தவறானது என்று ஸ்வான் டெலிகாம் நிறுவன இயக்குநர் ஷாகித் பல்வாவின் வழக்கறிஞர் டெல்லி நீதிமன்றத்தில் வாதாடினார்.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்றதற்கு ஆதாயமாக கலைஞர் டிவிக்கு ரூ200 கோடி பணம் கொடுக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் அன்னிய செலாவணி விதிகள் மீறப்பட்டுள்ளன என்பது அமலாக்கப் பிரிவு வழக்கு. இந்த வழக்கில் கலைஞர் டிவியின் இயக்குநரான திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, கனிமொமொழி எம்.பி, ஸ்வான் பல்வா உள்ளிட்ட 19 பேர் மீது குற்றம்சாட்டி குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கு தொடர்பாக தங்கள் தரப்பு பதிலை அவர்கள் தாக்கல் செய்தனர். மேலும், ஏற்கெனவே சிபிஐ விசாரித்து வரும் இதே விவகாரம் தொடர்புடைய வழக்கில், பணப் பரிவர்த்தனையில் முறைகேடு நடந்ததாக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அவ்வழக்கில் ஜாமீன் வழங்க வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்ட 19 பேர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதன் மீதான வாதங்கள் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஷாகித் உஸ்மான் பல்வா ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள மனுவில், அமலாக்கத் துறையின் வழக்கே தவறானது. குற்றப்பத்திரிகையில் ஏராளமான முரண்பாடுள் உள்ளன. சட்டப்பூர்வமாக நடந்த பரிவர்த்தனையை சட்டவிரோதமானது என்று குறிப்பிட்டுள்ள அமலாக்கத் துறை யார், யாரோ கூறியதை வைத்து கதை ஜோடித்து வழக்காகத் தொடர்ந்துள்ளது' என்று கூறியுள்ளார்.
இம்மனுவை வலியுறுத்தி அவரது வழக்கறிஞர் விஜய் அகர்வால் நேற்று வாதிட்டதாவது:
அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், ரூ. 200 கோடி அளவிலான பணப் பரிவர்த்தனை பல்வாவின் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கும் கலைஞர் டிவிக்கும் இடையே நடந்துள்ளது. அப்பரிவர்த்தனைக்கு பல்வேறு நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்டன என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆனால், பரிவர்த்தனை நடந்த நிறுவனங்கள் தொடர்புடைய பதிவாளர் துறையின் ஆவணங்களை அமலாக்கத் துறை ஆராயவில்லை. அத்துறையைச் சேர்ந்தவர்களையும் விசாரிக்கவில்லை. 2010ஆம் ஆண்டில் ராசாவை சிபிஐ விசாரிக்கத் தொடங்கிய பிறகுதான் கலைஞர் டிவிக்கு அளிக்கப்பட்ட பணம், மீண்டும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கே திருப்பி அனுப்பப்பட்டன என குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், ராசாவிடம் சிபிஐ விசாரணை நடத்துவதற்கு முன்பே, வாங்கிய கடன் தொகையில் 50 சதவீதத்தை கலைஞர் டிவி திருப்பிக் கொடுத்து விட்டது. இதை அமலாக்கத் துறை சரியாக விசாரிக்கவில்லை. இதுபோல ஏராளமான முரண்பாடுகள் இந்த வழக்கில் உள்ளன'
இவ்வாறு விஜய் அகர்வால் வாதிட்டார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள குசேகன் ஃபுரூட்ஸ் அன்ட் வெஜிடபிள்ஸ் இயக்குநர்கள் ஆசிஃப் பால்வா (ஷாஹித் பால்வாவின் சகோதரர்), ராஜீவ் அகர்வால், சினியூக் ஃபிலிம்ஸ் நிறுவனர் கரீம் மொரானி ஆகியோர் சார்பிலும் விஜய் அகர்வால் ஆஜராகி மேற்கண்ட வாதத்தை முன்வைத்தார்.