“ஆபரேசன் தாமரை” குஜராத் தேர்தல் நேரத்தில் பாஜகவின் “மூவ்”! 2 நாளில் 3 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் “ஜம்ப்”
காந்திநகர்: குஜராத்தில் வரும் டிசம்பர் மாதம் 2 கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடந்த 2 நாட்களில் 3 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து இருப்பது புதிய தலைவலியை கொடுத்து இருக்கிறது.
பாஜகவின் கோட்டையான குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வரும் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது.
2 கட்டங்களாக நடத்தப்படும் குஜராத் மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது.

பாஜக தீவிர பிரச்சாரம்
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலம் என்பதாலும், 27 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள மாநிலம் என்பதாலும், குஜராத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைக்க பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

பலவீனமாகும் காங்கிரஸ்
இது ஒருபுறம் இருக்க கடந்த 2017 குஜராத் தேர்தலில் கடும் நெருக்கடி கொடுத்த காங்கிரஸை தேர்தலுக்கு முன்பே பலவீனப்படுத்த தொடங்கி இருக்கிறது பாஜக. குஜராத்தில் காங்கிரஸின் சக்திவாய்ந்த தலைவராக இருந்த ஹர்திக் பட்டேல் கடந்த சில மாதங்களுக்கு முன் பாஜகவில் இணைந்தது அக்கட்சிக்கு பலத்த அடியாக பார்க்கப்பட்டது.

தொடரும் ராஜினாமா
இந்த சூழலில் குஜராத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே அடுத்தடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கட்சியில் இருந்து விலகி வருவது அக்கட்சி தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை மூத்த காங்கிரஸ் தலைவர் மோகன்சின்ஹ் ரதாவா கட்சியிலிருந்து விலகினார்.

சோட்டா உடெபூர் எம்.எல்.ஏ.
பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்த சோட்டா உடெபூர் சட்டமன்ற உறுப்பினர் ரதாவா குஜராத் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தது அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அதிக பழங்குடியின வாக்கு வங்கியை குஜராத்தில் காங்கிரஸுக்கு பலத்த அடி விழும் என கூறப்படுகிறது.

பாவேஷ் கடாரா
அதே நாளில், பழங்குடியின தொகுதியான ஜலோட்டின் இளம் காங்கிரஸ் எம்.எல்.ஏ பாவேஷ் கடாராவும் (வயது 37) தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து காங்கிரஸ் கட்சியினருக்கு அதிர்ச்சி கொடுத்து உள்ளார். பாவேஷ் கடாராவின் ராஜினாமாவை தொடர்ந்து ஜலோட் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக மருத்துவர் மிதேஷ் கராசியாவை அக்கட்சித் தலைமை அறிவித்து உள்ளது.

பக்வான் பரத்
அடுத்தடுத்து பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்த 2 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு தாவியுள்ளதால் தேர்தலில் அக்கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், மற்றொரு அதிர்ச்சியாக காங்கிரஸின் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவரான பக்வான் பரத் கட்சியிலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்து உள்ளார்.

சக்திவாய்ந்த தலைவர்
63 வயதான அவர் கிர் சோம்நாத் மாவட்டத்தில் அதிக செல்வாக்கு மிக்க அரசியல் தலைவராக அறியப்படுகிறார். ஆஷிர் சமுதாயத்தை சேர்ந்த இவர் கடந்த 2017 குஜராத் சட்டசபை தேர்தலில் 31,000 க்கும் அதிகமான வாக்குகளை பெற்று வென்றார். சௌராஷ்டிரா மாகாணத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் ஆஷிர் சமுதாயத்தின் மூத்த தலைவர் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்துள்ளது அக்கட்சிக்கு பேரிழப்பாக அமைந்து உள்ளது.












Click it and Unblock the Notifications