எமிரேட்ஸில் இருந்து நாடு கடத்தப்பட்ட 3 ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் டெல்லியில் கைது- கிடுக்குப்பிடி விசாரணை!
டெல்லி: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்ட 3 பேர் நேற்று இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். டெல்லி வந்திறங்கிய 3 பேரையும் கைது செய்து தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உலகின் மிக கொடூரமான ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் இந்தியர்கள் இணைவது தொடர் கதையாகி வருகிறது. இந்த இயக்கத்துக்கு ஆதரவாளர்களாகவும் இயக்கத்தில் சேர முயற்சித்தும் வெளிநாடுகளில் தொடர்ந்து பல இந்தியர்கள் பிடிபட்டு வருகின்றனர்.
தற்போதைய நிலையில் சிரியா, ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் 23 இந்தியர்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. இந் நிலையில் இந்தியாவை சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்களான அட்னான் உசேன், முகமது பர்கான், ஷேக் அசார் அல் இஸ்லாம் ஆகிய மூவரையும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கைது செய்து நேற்று இந்தியாவுக்கு நாடு கடத்தியது. இந்த 3 பேரும் மகாராஷ்டிரா, கர்நாடகா, காஷ்மீர் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் அபுதாபி பிரிவை சேர்ந்தவர்களாக இவர்கள் கருதப்படுகின்றனர். இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தாக்குதல் நடத்த இவர்கள் சதித் திட்டம் தீட்டியிருந்ததாக தெரியவந்துள்ளது.
டெல்லி விமான நிலையத்தில் நேற்று வந்திறங்கிய அவர்களை தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் கைது செய்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படும் 4 இந்தியர்கள் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.