119 சவரன் நகை திருட்டு: கொல்கத்தா கொள்ளையர்களை சென்னைக்கு தூக்கி வந்த போலீஸ்
கொல்கத்தா: அண்ணாநகர் டாக்டர் வீட்டில் 119 சவரன் நகைகளை கொள்ளையடித்த கும்பலை கொல்கத்தாவில் கைது செய்த போலீஸார் இன்று சென்னைக்கு கொண்டு வந்தனர்.
சென்னை அண்ணா நகரில் டாக்டர் ஆனந்தன் என்பவரின் வீட்டுக்குள் கடந்த 4-ஆம் தேதி 5 கொள்ளையர்கள் புகுந்து துப்பாக்கி முனையில் பணம், நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இந்த வழக்கில் டாக்டர் வீட்டு வேலைக்காரப் பெண் ஹசீராபேகம் முதலில் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், கொல்கத்தாவை சேர்ந்த அந்த பெண்ணின் கணவர் இம்ரான் மற்றும் அவரது கூட்டாளிகள் 5 பேர் சேர்ந்து திட்டமிட்டு இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. டாக்டர் வீட்டில் கொள்ளையடித்துவிட்டு இம்ரான் உட்பட 5 பேரும் ரயிலில் கொல்கத்தா தப்பிச் சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.
கொள்ளையர்கள் சென்னையில் தங்கியிருந்த லாட்ஜில் இருந்து தப்பி செல்லும் வீடியோ பதிவும் போலீசார் கையில் சிக்கியது. இதனையடுத்து அவர்களை பிடிக்க கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின்பேரில், அண்ணாநகர் துணை கமிஷனர் மனோகரன் மேற்பார்வையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதில், 2 தனிப்படை போலீசார், கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட ஹசீராபேகத்தை கொல்கத்தாவுக்கு அழைத்துச் சென்றனர்.
ஹசீரா பேகம் போலீசாரிடம் சிக்கிய தகவலறிந்த கொள்ளை கும்பல் அவருடனான தொடர்பை துண்டித்தனர். தங்களுடைய செல்போன் எண்ணையும் ‘சுவிட்ச் ஆப்' செய்துவிட்டனர்.
இது கொள்ளை கும்பல் இருக்கும் இடத்தை நெருங்குவதற்கு போலீசாருக்கு பின்னடைவாக அமைந்தது. இதற்கிடையில் கொல்கத்தா சென்ற தனிப்படை போலீசார், ஹசீரா பேகத்தை கொல்கத்தாவில் அவர் வசித்து வந்த காரையா என்ற கிராமத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். முகாமிட்டு தேடுதல் வேட்டை நடத்திய போலீசார் கொள்ளை கும்பல் குறித்த விவரங்களை அந்த கிராமத்தில் சேகரித்தனர்.
அப்போது இம்ரானின் உறவினருடைய செல்போனுக்கு ஒரே எண்ணில் இருந்து அடிக்கடி போன் வந்துள்ளதை தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர். அது இம்ரானுடைய செல்போன் நம்பர் என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார், கொல்கத்தா போலீசார் உதவியுடன் அந்த செல்போன் எண் இருக்கும் இடத்தை ‘டவர்' மூலம் கண்காணித்தனர்.
செல்போன் எண் ‘பத்ராக்' என்ற ரயில் நிலையத்தை காட்டியது. இதையடுத்து உஷாரான தனிப்படை போலீசார், கொல்கத்தா போலீசார் உதவியுடன் சம்பந்தப்பட்ட ரெயில்நிலையத்தை சுற்றி வளைத்தனர். ஆனால், அதற்குள் செல்போன் டவர் ‘பாலசோர்' என்ற ரயில் நிலையத்தை காட்டியது.
இதையடுத்து கொள்ளைகும்பல் ரயில் மூலம் செல்வதை அறிந்த போலீசார், ‘பாலசோர்' ரயில்நிலையத்தில் சோதனை போட்டனர். ஆனால் கொள்ளை கும்பல் சிக்கவில்லை. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாலசோரை அடுத்து உள்ள ‘காராக்பூர்' ரயில் நிலையத்தில் போலீசார் தயார்நிலையில் இருந்தனர். அப்போது ரயில்நிலையத்திற்குள் 3 ரயில்கள் வந்து நின்றன.
செல்போன் டவரும் ‘காராக்'பூரை அடையாளம் காட்டியது. எனினும் ஒரே நேரத்தில் 3 ரெயில்கள் வந்து நின்றதால், கொள்ளை கும்பல் எந்த ரயில் பெட்டியில் இருப்பார்கள் என்பது போலீசாருக்கு கடும் சவாலாக இருந்தது. எனினும் போலீசார் ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் ஏறி சோதனை போட்டபோது, கொல்கத்தா நோக்கி செல்லும் பயணிகள் ரயிலில் கொள்ளை கும்பல் பதுங்கி இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை பிடிக்க முற்பட்டபோது, அந்த கும்பல் தப்பி செல்ல முயன்றது.
ஆனால் தனிப்படை போலீசாரும், கொல்கத்தா போலீசாரும் விரட்டிச்சென்று கொள்ளை கும்பலை சுற்றி வளைத்து துப்பாக்கி முனையில் கைதுசெய்தனர்.
ஹசீராபேகம் உட்பட 6 பேரையும் கொல்கத்தா நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜர்படுத்திய போலீஸார் அவர்களை சென்னைக்கு அழைத்துவருவதற்கான அனுமதியையும் பெற்றனர்.
பின்னர் 6 பேரையும் பலத்த பாதுகாப்புடன் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் அழைத்து வருகின்றனர். சனிக்கிழமை மாலை புறப்பட்ட அவர்கள் இன்று காலை சென்னை சென்ட்ரலுக்கு வந்தனர்.
டாக்டர் வீட்டில் கொள்ளையடித்த நகை, பணத்தை பற்றி கொள்ளையர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.