மைசூர் ஹோட்டலில் பயங்கரம்.. கொதிக்கும் சாம்பாரில் விழுந்து 3 வயது குழந்தை பலி
மைசூரில் ஹோட்டல் ஒன்றில் கொதித்துக்கொண்டிருந்த சாம்பாரில் விழுந்த 3 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மைசூரூ: மைசூரு அருகே ஹோட்டலில் கொதித்துக் கொண்டிருந்த சாம்பாரில் விழுந்த 3 வயதுக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
மைசூருவை அடுத்த கும்பாரகுப்பலு என்ற கிராமத்தை சேர்ந்த மகாதேவச்சாரி- கவிதா தம்பதி. இவர்களுககு கிருஷ்ணா என்ற 3 வயது குழந்தை உள்ளது. கவிதா விஜயநகரில் உள்ள ஹோட்டலில் பாத்திரம் கழுவும் வேலை செய்து வருகிறார்.

குழந்தையை பார்த்துக்கொள்ள ஆள் இல்லாத காரணத்தால் கவிதா வேலைக்கு செல்லும் போது குழந்தையை தன்னுடன் கொண்டு சென்றுள்ளார். கடந்த திங்கள் கிழமை கவிதா பாத்திரம் கழுவிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த குழந்தை கிருஷ்ணா அடுப்பில் கொதித்துக்கொண்டிருந்த சாம்பாரில் எதிர்பாராதவிதமாக விழுந்தான். இதையடுத்து துடிதுடித்து அலறிய குழந்தையின் சத்தம் கேட்டு ஓடிய ஊழியர்கள் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
குழந்தையில் உடலில் தீக்காயம் அதிகம் இருந்ததால் கே.ஆர் மருத்துவமனைக்கு உயர்சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சைப்பலனின்றி குழந்தை நேற்று பரிதாபமாக உயிரிழந்தது.
இதுதொடர்பாக விஜயநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே குழந்தையின் பெற்றோர் ஹோட்டல் முன்பு போராட்டம் நடத்தினர். இதையடுத்து இழப்பீடு வழங்குவதாக ஹோட்டல் நிர்வாகம் உறுதியளித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications