இந்தியாவில் இனி ரூ500, ரூ1000 நோட்டுகள் செல்லாது! கருப்பு பணம், கள்ள நோட்டை ஒழிக்க அதிரடி நடவடிக்கை!
டெல்லி: இந்தியாவில் இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் இன்று முதல் செல்லாதவையாகிவிட்டன. பழைய நோட்டுக்களுக்கு பதிலாக புதிய ரூ.500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி, செவ்வாய்க்கிழமை இரவு திடீரென அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய் இரவு சுமார் 8.15 மணிக்கு டிவியில் தோன்றி நாட்டு மக்களை நோக்கி உரை நிகழ்த்தினார். அப்போது, ஊழல், கருப்பு பணம், தீவிரவாதம் ஆகியவை நாட்டின் எதிரிகள் என்றும், அவற்றை வேரறுக்க தனது அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

வறுமை, ஏழ்மையை ஒழிக்க மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்துவருவதாக கூறிய மோடி, நவம்பர் 8ம் தேதி (அதாவது நேற்று) நள்ளிரவு 12 மணியோடு, தற்போது புழக்கத்திலுள்ள ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாதவையாகிவிடும் என்று, அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
10ம் தேதி வியாழக்கிழமை முதல், டிசம்பர் 30ம் தேதிவரை, அனைத்து வங்கி கிளைகள் மற்றும் அஞ்சலகங்களிலும் தற்போதுள்ள ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை கொடுத்துவிட்டு, அரசு புதிதாக வழங்க உள்ள ரூ.500 அல்லது ரூ.2000 நோட்டுக்களை வாங்கிக் கொள்ளலாம் என்றும் பிரதமர் அறிவித்தார். ஒருவேளை டிசம்பர் 30ம் தேதிக்குள் பணத்தை மாற்ற இயலவில்லை எனில் அடுத்த வருடம் மார்ச் 31ம் தேதிக்குள் மாற்றிக்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இப்படி நோட்டுக்களை மாற்றும்போது அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயம்.

புதன்கிழமையான இன்று நாடு முழுக்க வங்கிகள், ஏடிஎம்கள் மற்றும் அஞ்சலகங்கள் செயல்படாது எனவும், டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் பண பரிவர்த்தனையை மக்கள் மேற்கொள்வதில் பாதிப்பு இல்லை எனவும், மோடி தெரிவித்தார். புதிய ரூ500, ரூ2000 நோட்டுகளை வங்கிகளில் சேர்க்க இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நாளை ஒரு சில இடங்களில் மட்டும் ஏடிஎம் செயல்படாது, பெரும்பாலான பகுதிகளில் செயல்படும்.
பிரதமரின் இந்த அறிவிப்பால் நேற்று இரவே வங்கி ஏடிஎம்களில் ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை டெபாசிட் செய்ய மக்கள் கூட்டம் அலைமோதியது. ரூ.100 முக மதிப்பில் பணத்தை எடுத்துக்கொள்ளவும் மக்கள் ஆர்வம் காட்டியதால் நீண்ட கியூ காணப்பட்டது. கருப்பு பண முதலைகளை சிக்க வைக்க மோடி எடுத்த அதிரடி நடவடிக்கை என்று ஒரு தரப்பும், இதனால் மக்கள் அவதிப்படுகிறார்கள் என்று மற்றொரு தரப்பும் சமூக தளங்களில் மோதிக்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications