ராஜஸ்தானில் 60% பேர் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாது!: புதிய சட்டம்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட கல்வித் தகுதியை நிர்ணயித்து அம்மாநில அரசு பிறப்பித்த உத்தரவால் 60% உள்ளாட்சி பிரதிநிதிகள் தகுதி இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநில உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட குறைந்தபட்ச கல்வித் தகுதியை நிர்ணயித்து அம்மாநில அரசு கடந்த டிசம்பர் 24-ம் தேதி அவசர சட்டம் பிறப்பித்தது. இதன்படி மாவட்ட ஊராட்சி (ஜில்லா பரிஷத்) மற்றும் ஊராட்சி ஒன்றிய (பஞ்சாயத் சமிதி) தேர்தல்களில் போட்டியிட குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 10-ம் வகுப்பு தேர்ச்சியும், ஊராட்சித் தலைவர் (சர்பஞ்ச்) பதவிக்கு போட்டியிட குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். பழங்குடியினர் தனி தொகுதியாக இருந்தால் 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்த அவசர சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட 11 எதிர்க்கட்சிகள், தன்னார்வ அமைப்புகள் வழக்குத் தொடர்ந்தன. ஆனால் உச்சநீதிமன்றமோ ராஜஸ்தான் அரசின் முடிவில் தலையிட மறுத்துவிட்டது.
அவசர சட்டத்தால் தற்போது பதவியில் இருக்கும் 60% உள்ளாட்சி பிரதிநிதிகள் தகுதி இழக்கும் நிலை உருவாகி உள்ளது. இதில் 47% பேர் பெண்கள் என்கிறது இண்டியா ஸ்பென்ட் இணையதளம். இது தொடர்பாக இந்த இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரை:
2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஊராட்சி ஒன்றிய தேர்தலில் போட்ட்டியிட்டு வென்ற பிரதிநிதிகளில் மொத்தம் 726 பேர் அடிப்படை கல்வி அறிவு பெறாதவர்கள். இவர்களில் 174 பேர் தாழ்த்தப்பட்டோர்(எஸ்.சி) , 135 பேர் பழங்குடியினத்தவர். (எஸ்.டி)
9-ம் வகுப்பு வரை படித்த பிரதிநிதிகள் எண்ணிக்கை 2,991. இதில் எஸ்.சி. வகுப்பினர் 625, எஸ்.டி. பிரிவினர் 581 பேர்.
10-ம் வகுப்பு,11-ம் வகுப்பு வரை படித்தவர்கள் எண்ணிக்கை 585. இதில் எஸ்.சி. 95, எஸ்.டி. 89 பேர்.
உள்ளாட்சிப் பிரதிநிதிகளில் மேல்நிலைக் கல்வி படித்தவர்கள் எண்ணிக்கை 298. இதில் எஸ்.சி. 40, எஸ்.டி. 52 பேர்.
பட்டதாரிகள் 384 பேர் ஊராட்சி ஒன்றிய பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் 49 பேர் எஸ்.சி, 51 பேர் எஸ்.டி. வகுப்பினர்.
முதுநிலை பட்டதாரிகள் 187 பேர் கடந்த 2010ஆம் ஆண்டு இம்மாநில ஊராட்சி ஒன்றிய தேர்தலில் வென்றனர். இவர்களில் 31 பேர் எஸ்.சி., 29 பேர் எஸ்.டி. வகுப்பினர்.
தொழில்சார் படிப்பு படித்தோர் 39 பேர் ஊராட்சி ஒன்றிய பிரதிநிதிகள். இவர்களில் 4 பேர் எஸ்.சி., 7 பேர் எஸ்.டி. வகுப்பினர்.
முனைவர் பட்டம் பெற்ற 2 பேர் ஊராட்சி ஒன்றிய பிரதிநிதிகளாகினர். இவர்களில் ஒருவர் எஸ்.டி வகுப்பைச் சேர்ந்தவர்.
ஊராட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வென்றவர்களில் 13% பேர் அடிப்படை கல்வி பெறாதவர்கள். 56.50% பேர் 9ஆம் வகுப்பு வரை படித்தவர்கள். 10,11ஆம் வகுப்பு படித்தவர்கள் 10.71%; மேல்நிலைக் கல்வி படித்தவர்கள் 5.65%; பட்டதாரிகள் 7.28% பேர் ஆகும்.
2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தேசிய அளவிலான கல்வி அறிவு பெற்றோர் 74%. ராஜஸ்தான் மாநிலத்தில் இது 67%.
ராஜஸ்தான் மாநிலத்தில் கிராமப்புறங்களில் 5வது வகுப்புக்கு மேல் படித்த பெண்கள் 5% மட்டுமே என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.
இதனால் தற்போதைய சட்டத்தால் உள்ளாட்சி பிரதிநிதிகளில் சுமார் 60% பேர் தகுதி இழப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.