குஜராத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. சாலைகளில் வெள்ளம்.. ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்த சோகம்
காந்திநகர்: குஜராத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை முதல் அதிகனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
குஜராத் மாநிலத்தின் பரவலான பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மாநிலத்தின் தலைநகரான அகமதாபாத்தில் 219 மி.மீ வரை மழை பொழிந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள், குடியிருப்புகள், சாலைகள் என பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தொடர் மழை காரணமாக திங்கட்கிழமை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டன. இந்த தொடர் மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்தும், வெள்ளத்தில் மூழ்கியும், இடி மின்னல் தாக்கியும் கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் வரை உயிரிழந்துள்ளனர். ஜூன் 1ம் தேதி முதல் தற்போது வரை கனமழைக்கு மாநிலம் முழுவதும் 63 பேர் வரை உயிரிழந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ராஜேந்திர திரிவேதி கூறியுள்ளார்.
தெற்கு குஜராத்தில், டாங், நவ்சாரி, தபி மற்றும் வல்சாத் மாவட்டங்களும் மத்திய குஜராத்தில் பஞ்சமஹால், சோட்டா உதேபூர் மற்றும் கெடா மாவட்டங்களும் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் தற்போது வரை 9,000 பேர் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். வெள்ளம் மற்றும் இடிபாடுகளில் சிக்கி தவித்த 468 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து கொடுக்கும் என பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்துள்ளனர்.
வெள்ளம் அதிகம் பாதித்த பகுதிகளில் மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் தேசிய மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளதாக அமித்ஷா தெரிவித்துள்ளார். இதற்கிடையில் வால்சாத் மாவட்டத்தில் அம்பிகா நதிக்கு இடையில் வெள்ளத்தில் சிக்கியிருந்த 16 பேரை இந்திய கடற்படையினர் வான்வழியாக பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
ரயில் சேவையை பொறுத்த அளவில் சந்தோட் மற்றும் ஏக்தா நகர் ரயில் நிலையங்களுக்கிடையில் தண்டவாளங்கல் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதால் 4 பயணிகள் ரயில் மற்றும் ஒரு எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவை துண்டிக்கப்பட்டுள்ளதாக மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமையான நேற்று மட்டும் குஜராத் 4 மணி நேரத்தில் 18மி.மீ அளவு மழைபொழிவை பெற்றுள்ளது. இதன் காரணமாக அணைகள் வேகமாக முழு கொள்ளவை எட்டியுள்ளன. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆனாலும் மழை தொடர்ந்து நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் பரவலாக கனமழை அல்லது மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதற்கிடையில் பிரதமர் நரேந்திர மோடி அம்மாநில முதலமைச்சரான பூபேந்திர படேலிடம் நிலைமையின் தீவிரத்தை தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications