தனியார் துறையில் ம.பி. மாநில இளைஞர்களுக்கு 70% இடஒதுக்கீடு- முதல்வர் கமல்நாத் அதிரடி நடவடிக்கை
Recommended Video
போபால்: தனியார் துறையில் மத்திய பிரதேச மாநில இளைஞர்களுக்கு 70% இடஒதுக்கீடு வழங்க விரைவில் சட்டம் இயற்றுவோம் என அம்மாநில முதல்வர் கமல்நாத் அதிரடியாக அறிவித்துள்ளார்.
சமூக நீதிக்காக தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்; மத்திய அரசு பணிகளிலும் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை.
தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகங்களில் வெளிமாநிலத்தவர் திட்டமிட்டு திணிக்கப்படுவதாகவும் புகார் உள்ளது. இந்த நிலையில் அதிரடியாக மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில். மத்திய பிரதேசத்தில் செயல்படும் தனியார் துறை நிறுவனங்களில் உள்ளூர் இளைஞர்களுக்கு 70% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் விரைவில் இயற்றப்படும் என கூறியுள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்தியபிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் கமலேஸ்வர், அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது.
மத்திய பிரதேச இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை இது உறுதி செய்யும். கடந்த கால பாஜக அரசு இந்த விஷயத்தில் அக்கறை செலுத்தாமல் இருந்தது. வெளிமாநிலத்தவருக்கு தனியார்துறையில் 30% இடஒதுக்கீடு என்பது போதுமானது என்றார்.