மத்திய பாஜக ஆட்சியில் வடகிழக்கில் 9,000 தீவிரவாதிகள் சரண் அடைந்துள்ளனர்: அமைச்சர் அமித்ஷா பெருமிதம்
சூரஜ்கண்ட்: மத்திய பாஜக ஆட்சியில் வடகிழக்கில் சுமார் 9,000-க்கும் அதிகமான தீவிரவாதிகள் சரண் அடைந்துள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமிதம் தெரிவித்தார்.
ஹரியானாவின் சூரஜ்கண்ட்டில் மாநிலங்களின் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டை நேற்று தொடங்கி வைத்து அமித்ஷா பேசியதாவது: கணினி குற்றங்கள், போதைப்பொருள் பரவல், எல்லை தாண்டிய பயங்கரவாதம் போன்ற சவால்களை எதிர்கொள்ள பொது மேடையை இது வழங்குகிறது. தற்போது குற்றங்களின் தன்மை மாறிவருகிறது. எல்லைகள் இல்லாததாக அவை இருக்கின்றன. இதனால், இவற்றை எதிர்த்து போராட மாநிலங்களுக்கு பொதுவான உத்தி தேவைப்படுகிறது.
இடதுசாரி அதிதீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள், ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் ஆகியவை ஒரு காலத்தில் வன்முறை மற்றும் அமைதியின்மையின் இடங்களாக இருந்தன. தற்போது இவை வளர்ச்சியின் இடங்களாக மாறியுள்ளன . கடந்த 8 ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களின் பாதுகாப்பு நிலைமை குறிப்பிடத்தக்க அளவு முன்னேறியுள்ளது. வன்முறை சம்பவங்கள் 74 சதவீதமும், பாதுகாப்புப் படையினரிடையே உயிரிழப்புகள் 60 சதவீதமும் பொதுமக்கள் உயிரிழப்புகள் 90 சதவீதமும் குறைந்துள்ளது. இது தவிர, பல்வேறு தீவிரவாத அமைப்புகளுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதால் நீடித்த அமைதி நிலைநாட்டப்பட்டதாகவும், 9,000-க்கும் அதிகமான தீவிரவாதிகள் சரண் அடைந்துள்ளனர்.
2024-க்கு முன் அனைத்து மாநிலங்களிலும், இதன் கிளைகளை அமைப்பதன் மூலம் பயங்கரவாதத்திற்கு எதிரான வலைப்பின்னலை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. பாதுகாப்புக்குரிய பெரும்பாலான இடங்கள், தேசவிரோத செயல்களிலிருந்து பெரும்பாலும் விடுபட்டுள்ளன. இதற்குக் காரணம் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே பரஸ்பர ஒத்துழைப்பும், ஒருங்கிணைப்பும்தான்.
தேசத்தின் வளர்ச்சிக்கும் நிலைத்தன்மைக்கும் நல்ல நிர்வாகத்திற்கும், உள்நாட்டு பாதுகாப்பு மிக முக்கியமானது. அனைவருக்கும் இது பொதுப்படையான பொறுப்பு. தேசக்கட்டமைப்பில், மத்திய, மாநில அரசுளுக்கு சமபொறுப்பு இருக்கிறது. அனைத்து நிலைகளிலும் நெருக்கமான ஒத்துழைப்பு இருக்கும்போதுதான் நாடு முன்னேற்றம் அடையும் . ஒத்துழைப்புடன் கூடிய கூட்டாட்சி முறையின் உணர்வு நம்மை இயக்கும் சக்தியாக இருக்கவேண்டும்.இந்த சிந்தனை முகாம் பிராந்திய ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தும்.