குன்ஹா தீர்ப்பை ரத்து செய்த நீதிபதி குமாரசாமி....!
டெல்லி: உச்சநீதிமன்ற அறிவுறுத்தல்படி ஊழல்வாதிகளுக்கு தக்க தண்டனை கொடுக்கும் வகையிலான தீர்ப்பை ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதி குமாரசாமி அளிப்பார் என்று பலத்த எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரையும் நீதிபதி குமாரசாமி விடுவித்துள்ளார்.
இந்திய நீதித்துறையை எரிச்சலூட்டிய ஏன் கோபமூட்டிய ஒரு வழக்கு ஜெயலலிதாவுக்கு எதிரான வருமானத்துக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு. 18 ஆண்டுகாலம் இழுத்தடிக்கப்பட்ட இந்த வழக்கில் முதல் கிளைமாக்ஸ் எழுதியவர் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி தீர்ப்பளித்த நீதிபதி குன்ஹா ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தார். மேலும் ஜெயலலிதாவுக்கு ரூ100 கோடி அபராதம் விதித்தார். இதன் பின்னர் ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு பல முக்கிய திருப்பங்களை ஏற்படுத்தியது.
இம்மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜராவார் என தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து பவானிசிங் ஆஜராகி தமது தரப்பு வாதத்தை முன்வைத்து விசாரணையும் முடிவடைந்தது. ஆனால் பவானிசிங் நியமனமே செல்லாது என்று உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகன் மனுத்தாக்கல் செய்தார்.
இம்மனு மீது இறுதி தீர்ப்பளித்த நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் இவ்வழக்கின் தீர்ப்பு எப்படியானதாக இருக்கவேண்டும் என்பதை கோடிட்டுக் காட்டி அறிவுறுத்தியுள்ளனர்.
குறிப்பாக நீதிபதி தீபக் மிஸ்ரா தீர்ப்பளிக்கையில், சாட்சியங்களை பரிசீலித்து உணர்ச்சிவசப்படாமல் தீர்ப்பளிக்க வேண்டியதும் ஒரு நீதிபதியின் கடமை... ஊழல் என்பது நாட்டின் எதிரி. ஊழல் செய்யும் அரசு ஊழியர்களை கண்டுபிடித்து தண்டிப்பது என்பது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கடமை. அரசு வழக்கறிஞர் பவானிசிங்கின் வாதங்களை நிராகரித்து கர்நாடகா அரசு மற்றும் தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகன் தரப்பு வாதங்களைக் கருத்தில் கொண்டு தீர்ப்பளிக்க வேண்டும் என்று கடந்த மாதம் 27-ந் தேதியளித்த அறிவுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில் இன்று தீர்ப்பு ஜெயலலிதா தரப்புக்குச் சாதகமாக வந்து சேர்ந்துள்ளது.