பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11000 கோடி மோசடியை கண்டறிந்தது புதிதாக பொறுப்பேற்ற அதிகாரி!
பஞ்சாப் நேஷநல் வங்கியில் ரூ. 11000 கோடி மோசடியை கண்டறிந்தது புதிதாக பொறுப்பேற்ற அதிகாரி என்ற தகவல் கிடைத்துள்ளது.
மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11000 கோடி மோசடியை அந்த வங்கியில் புதிதாக பொறுப்பேற்ற புதிய அதிகாரிதான் கண்டறிந்தாராம்.
பஞ்சாப் நேஷனல் வங்கி, பங்குச் சந்தைக்கு (பிஎஸ்இ) அனுப்பியுள்ள அறிக்கையில் ரூ.11000 கோடி முறைகேடு நடந்ததாக அனுப்பியுள்ளது. இதை கடந்த 10 நாட்களுக்கு முன்னர் அதிகாரிகள் நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த மோசடி வழக்கில் பிரபல நகைக் கடை அதிபர் நிரவ் மோடிக்கு எதிராக இரு புகார்கள் எழுநதுள்ளன. இந்த முறைகேடுகள் கடன் பொறுப்பேற்பு ஆவணங்கள் மூலம் நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
அதிகாரி ஓய்வு
இந்த விவகாரம் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி வெளிச்சத்துக்கு வந்தது. வைர வியாபாரி நீரவ் மோடியின் நிறுவனம் புதிய கடனை கேட்டு கடந்த ஆண்டு விண்ணப்பித்தது. அந்த நிறுவனத்துடன் வங்கியின் அதிகாரியும் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டு விட்டு பின்னர் அவர் ஓய்வு பெற்றது தெரியவந்தது.
29-ஆம் தேதி கடிதம்
இதையடுத்து புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட அதிகாரி ஒருவர் இந்த மோசடி குறித்து சிபிஐக்கு கடந்த ஜனவரி 29-ஆம் தேதி கடிதம் எழுதினார். அதில் இரு வங்கி அதிகாரிகளின் பெயர்களை அந்த புதிய அதிகாரி குறிப்பிட்டிருந்தார்.
பயன்படுத்தவில்லை
வெளிநாட்டு வர்த்தகத்துக்கு பணம் செலுத்த வேண்டி ரூ. 280 கோடியை வைர வியாபாரி நீரவ் மோடி கடன் வாங்கியுள்ளார். ஆனால் அவற்றை அவர் கூறிய காரணங்களுக்காக பயன்படுத்தவில்லை. அதை எதற்கு பயன்படுத்தினார் என்பதற்கும் விவரங்கள் இல்லை என்று புதிய அதிகாரி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நீரவ் மோடியின் வீட்டுக்கு சீல்
நீரவ் மோடியின் நிறுவனத்துக்கு கடன் வரன்முறையே கிடையாது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை குறித்து 30 வங்கிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீரவ் மோடியின் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து அவரது வீட்டுக்கு சீல் வைத்தனர்.