மகரவிளக்கு பூஜை: சபரிமலையில் பலத்த பாதுகாப்பு - கண்காணிப்பில் குட்டி விமானம்!
சபரிமலை: இந்தியாவில் புகழ் பெற்ற ஆலயங்களில் கேரளமாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலும் ஓன்று.இந்த கோவிலுக்கு நாடெங்கும் இருந்தும் பக்தர்கள் மாலை அணிந்து, விரதமிருந்து இருமுடி கட்டி சாமியை தரிசனம் செய்து வருகிறார்கள்.
தற்போது மகரவிளக்கு பூஜை நடைபெறுவதாலும்,பஞ்சாப் மாநிலத்தின் பதன் கோட்டில் தீவீரவாதிகள் தாக்குதலைத் தொடர்ந்து மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இன்று முதல் 30 துணைக் கண்காணிப்பாளர்கள் ,60 இன்ஸ்பெக்டர்கள் ,230 சப் இன்ஸ்பெக்டர்கள், 2 ஆயிரத்து 500போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
கூடுதல் போலீசார் வரவழைப்பு:
அதுமட்டுமின்றி தமிழ்நாடு,ஆந்திரா,கர்நாடகா,ஆகிய மாநிலங்களில் இருந்தும் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட உள்ளனர். ஏற்கனவே கேரள போலீஸ் தவிர மத்திய அதிவேக அதிரடிப்படை, கமாண்டோ படை வீரர்கள், மத்திய ரிசர்வ் போலீசார், ரிசர்வ் கமாண்டோ படை வீரர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேமரா கண்காணிப்பு:
இந்தநிலையில் கூடுதல் பாதுகாப்பு பணிக்காக மத்திய ரிசர்வ் போலீசார் மாவோயிஸ்டுகளை வனப்பகுதியில் கண்காணிக்க பயன்படுத்தும் கேமரா பொருத்தப்பட்டுள்ள குட்டி விமானம் வரவழைக்கப்பட்டுள்ளது.
ஐ.ஐ.டி மாணவர்களின் குட்டி விமானம்:
மும்பை ஐ.ஐ.டி மாணவர்கள் உருவாக்கிய இந்த அதிநவீன குட்டி விமானத்தின் விலை ரூபாய் 35 லட்சமாகும். இதில் 2 ஹெச்.டி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
படம் பிடிக்கும் திறன்:
இந்த குட்டி விமானம் 200 மீட்டர் உயரத்தில் பறந்து 1 கி.மீ. சுற்றளவிலுள்ள காட்சிகளை படம் பிடிக்கும் திறன் கொண்டதாகும். இதன் மூலமாக சபரிமலையில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.