மானிய விலையில் ரேஷன் பொருட்கள் வாங்க ஆதார் கட்டாயம் - மத்திய அரசு அறிவிப்பு
ரேஷனில் மானிய விலையில் பொருட்களை பெற ஆதார் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
டெல்லி: ரேஷன் கடைகளில் மானிய விலையில் உணவுப் பொருட்களைப் பெறுவதில், ஊழலை ஒழிக்கும் நோக்குடன் ஆதார் எண்ணைக் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பொது விநியோகத் திட்டத்தை சீரமைக்கும் நடவடிக்கையாக, குடும்ப அட்டையுடன் ஆதார் எண்னை இணைக்கும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

ஏற்கனவே மத்திய அரசின் பல சலுகைகளுக்கு ஆதார் எண் கட்டாயமாக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க ஜூன் 30-ஆம் தேதி வரை பொதுமக்களுக்குக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்பின், உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ஆதார் எண் கட்டாயமாக்கப்படுவது நடைமுறைக்கு வரும் எனவும் மத்திய அரசு கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. மாதம் ஒன்றுக்கு 80 கோடி மக்களுக்கு மானிய விலையில் தலா 5 கிலோ அரிசி அல்லது கோதுமை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே கடந்த 2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆதார் எண் இல்லாததைக் காரணம் காட்டி, எந்தவொரு குடிமகனுக்கும் நலத்திட்டங்கள் மறுக்கப்படக் கூடாது என உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications