4 மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ஊழல்வாதிகளின் முகத்திரையை கிழிக்க ஆம் ஆத்மி முடிவு!
டெல்லி: நடைபெற உள்ள சட்டசபை தேர்தல்களில் போட்டியிடப்போவதில்லை என்று முடிவெடுத்துள்ள ஆம் ஆத்மி தேர்தலில் நடைபெறும் முறைகேடுகளையும், ஊழல்வாதி வேட்பாளர்களையும் அம்பலப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது.
மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்கண்ட், ஜம்மு காஷ்மீர் ஆகிய நான்கு மாநிலங்களில் விரைவில் சட்ட சபை தேர்தல்கள் நடைபெற உள்ளது.

இந்நிலையில், ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர் பிரீத்தி ஷர்மா மேனன் கூறுகையில் "சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ஊழல்வாதி வேட்பாளர் குறித்து தகவல் கிடைத்ததும், அதுகுறித்து போஸ்டர் அடித்து ஒட்டுவது, மேடை போட்டு பேசுவது, வீதி நாடகங்கள் நடத்துவது போன்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஆம் ஆத்மி ஈடுபடும். நேர்மையான வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிக்க தேவையான ஊக்கத்தை அளிப்போம்.
நல்ல வேட்பாளர்களும் தேர்தலில் போட்டியிடுவார்கள். ஆனால் அவர்களுக்கு விளம்பரம் அளிக்கும் நடைமுறை எங்களுக்கு தெரியாது. எனவே நேர்மையானவர்களை தேர்ந்தெடுக்கும் ஊக்கத்தை மட்டும் மக்களிடம் விதைக்க உள்ளோம்" என்றார்.
'ஜாக்ருத் நாக்ரீக்', அதாவது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்ற பெயரில் ஆம் ஆத்மி சட்ட சபை தேர்தல்களில் பணியாற்ற உள்ளது.
நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி எதிர்பார்த்த அளவுக்கு தேசிய அளவில் வெற்றி பெற முடியவில்லை. எனவே தனக்கு பலம் மிக்க டெல்லி மற்றும் அதன் அண்டை மாநிலங்களில் மட்டும் தேர்தலில் போட்டியிடுவது என்றும் பிற மாநிலங்களில், அரசியல் கட்சியாக இல்லாமல், ஒரு இயக்கம் என்ற தளத்தில் மட்டும் செயலாற்றுவது என்றும் ஆம் ஆத்மி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications