பெட்டி பெட்டியாக பணத்தை வங்கியில் டெபாசிட் செய்த சசிகலா, இளவரசி, சுதாகரன்- சுப்ரீம்கோர்ட்டில் தவே
டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து பெட்டி பெட்டியாக பணத்தை வங்கியில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் டெபாசிட் செய்ததாக சாட்சிகள் கூறியதை கர்நாடகா உயர்நீதிமன்ற தனிநீதிபதி குமாரசாமி கணக்கில் கொள்ளவில்லை என உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே சுட்டிக்காட்டினார்.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தார் பெங்களூர் தனிநீதிமன்ற நீதிபதி குன்ஹா. ஆனால் மேல்முறையீட்டு விசாரணையில் ஜெயலலிதாவை விடுதலை செய்தார் கர்நாடகா உயர்நீதிமன்ற தனிநீதிபதி குமாரசாமி.

ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசும் திமுக பொதுச்செயலர் அன்பழகனும் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இம்மனு மீது நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கடந்த 2 நாட்களாக விசாரணை நடத்தியது.
ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு எதிராக கர்நாடகா அரசு சார்பாக மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே தம்முடைய இறுதி வாதங்களை முன்வைத்தார். இன்று கடைசி நாளாக தவேவின் வாதம் தொடர இருந்தது. ஆனால் இவ்வழக்கின் விசாரணை மார்ச் 10-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 நாட்களாக தம்முடைய வாதத்தில் மூத்த வழக்கறிஞர் தவே முன்வைத்த வாதங்கள்:
வருமானத்துக்கு அதிகமாக ரூ55 கோடி அளவுக்கு சொத்து குவிக்க சட்டப்பூர்வமாக எங்கிருந்து வருமானம் கிடைத்தது? என்பதற்கான சான்றுகளை ஜெயலலிதா தாக்கல் செய்யவில்லை. இதற்கு மாறாக தொண்டர்களிடம் இருந்து பணம் பெற்றதாக கூறியிருக்கிறார்.
கர்நாடகா உயர்நீதிமன்றமோ(நீதிபதி குமாரசாமியோ) வங்கிக் கடன்களையெல்லாம் வருமானமாக காட்டியிருக்கிறார். கடன்கள் எப்படி வருமானமாக முடியும்? உச்சநீதிமன்றத்தின் 1960-ம் ஆண்டு தீர்ப்பில் பயணப்படிகளை வருமானமாக கருதக் கூடாது என கூறப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பு இதற்கும் பொருந்தும்.
இவ்வழக்கின் குற்றவாளிகளான சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் ஜெயலலிதா வீட்டில்தான் தங்கியிருந்தனர். இவர்கள்தான் பணத்தை பெட்டிகளில் எடுத்துக் கொண்டுபோய் வங்கிகளில் டெபாசிட் செய்தனர் என்று சாட்சிகள் கூறுகின்றன. ஆனால் கர்நாடகா உயர்நீதிமன்றம் (நீதிபதி குமாரசாமி) இதை கவனத்தில் கொள்ளவே இல்லை.
பரிசுப் பொருட்கள் மூலமாக சொத்துகள் சேர்ந்ததாக ஜெயலலிதா தரப்பு சொல்கிறது. பரிசுப் பொருட்கள் மூலம் சொத்துகள் வந்தது என்று சொல்லியே அரசியல்வாதிகள் ஊழல் வழக்குகளில் இருந்து தப்பித்துவிடுகின்றனர்; பரிசுப் பொருட்கள் மூலம் கிடைக்கும் சொத்துகளையும் சட்டப்பூர்வமான வருமானமாக கருத வேண்டும்; அப்போதுதான் ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் தப்பிக்க முடியாது.
இவ்வாறு தவே வாதிட்டிருந்தார்.
உச்சநீதிமன்றத்தில் துஷ்யந்த் தவேவின் இறுதி வாதம் மார்ச் 10-ந் தேதியும் தொடர உள்ளது.












Click it and Unblock the Notifications