பாபா ராம்தேவ் நிறுவன சிஇஓ ஆச்சார்யாவின் டிகிரி, பாஸ்போர்ட் எல்லாமே போர்ஜரியாம்!
டெல்லி: சர்ச்சைக்குரிய யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான ஆச்சார்யாவின் டிகிரி, பாஸ்போர்ட் எல்லாமோ போர்ஜரி செய்யப்பட்டது என அம்பலமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அண்மையில் இந்திய பணக்காரர்கள் பட்டியலை ஹருன் ஆய்வு நிறுவனம் வெளியிட்டிருந்தது. இதில் பதஞ்சலி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆச்சார்யா பால்கிருஷ்ணாவும் இடம் பிடித்திருந்தார்.
அத்துடன் இந்தியாவின் முக்கிய தொழிலதிபர்களான பஜாஜ் ஆட்டோ நிறுவனத் தலைவர் ராகுல் பஜாஜ், மாரிகோ தலைவர் ஹரிஷ் மரிவாலா, பிரமல் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் அஜய் பிரமல் ஆகியோரை விட இந்தப் பட்டியலில் முன்னிலையில் இருக்கிறார் ஆச்சார்யா பால் கிருஷ்ணா. அதாவது இவரின் சொத்து மதிப்பு ரூ.25,600 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த பட்டியலில் ஆச்சார்யா பால்கிருஷ்ணா 26-ம் இடத்தில் இருக்கிறார். 2007-ம் ஆண்டு சிறிய மருந்தகமாக தொடங்கப்பட்டு தற்போது முன்னணி நிறுவனமாக பதஞ்சலி இருக்கிறது.
பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் ஆச்சார்யா, ஆயுர்வேதத்தில் தலைசிறந்த வல்லுநர்; சஞ்சீவி மூலிகையை மீண்டும் கண்டுபிடித்தவர் என்றெல்லாம் பாபா ராம்தேவின் பதஞ்சலி யோகா பீட ஆசிரமம் கூறுகிறது. ஆனால் உண்மையில் சமஸ்கிருதத்தில் படித்ததாக ஆச்சார்யா காட்டும் டிகிரி சான்றிதழ் போலியானதாம்.
கடந்த 2012-ம் ஆண்டே போலி ஆவணங்களை கொடுத்ததாக ஆச்சார்யா மீது புகார் இருக்கிறது. இது தொடர்பாக விசாரித்த சிபிஐ, ஆச்சார்யா கொடுத்த போலியான பள்ளி, கல்லூரி சான்றிதழ்களின் அடிப்படையில்தான் அவருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டிருக்கிறது என சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் ஆச்சார்யா மீது அன்னிய செலாவணி மோசடி வழக்கும் ஒன்றும் நிலுவையில் இருந்தது. இந்த வழக்கு மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி வந்ததும் கைவிடப்பட்டது என்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு தெரிவித்துள்ளது.