எழுத்தாளர் அனந்த மூர்த்தி மறைவை பட்டாசு வெடித்து கொண்டாடிய இந்து அமைப்பினர்!
மங்களூர்: கன்னட எழுத்தாளர் அனந்தமூர்த்தி இறந்ததை இந்து அமைப்பை சேர்ந்த சிலர் பட்டாசு வெடித்து கொண்டாடியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எழுத்தாளர் அனந்தமூர்த்தி பஜ்ரங்தள், ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் மட்டுமின்றி, பாஜகவுக்கு எதிராகவும் நிலைப்பாட்டை கொண்டிருந்தார். இந்த அமைப்புகளுக்கு எதிராக மனதில் பட்டதை புத்தகமாக எழுதிவிடுவார். பொது மேடைகளிலும் பேசிவிடுவார்.
சில நேரங்களில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும் அனந்தமூர்த்தி பேசியுள்ளார். இதற்காக பல்வேறு காவல் நிலையங்களில் இந்து அமைப்புகள் கொடுத்த புகார்கள் நிலுவையிலுள்ளன.
இந்நிலையில் அனந்தமூர்த்தி உடல் நலக்குறைவால் உயிரிழந்த செய்தி நேற்றிரவு வெளியானதும், மங்களூர், சிக்மகளூர் மாவட்டங்களில் இந்து அமைப்புகளை சேர்ந்த சிலர், பட்டாசு வெடித்து கொண்டாடினர். நரகாசூரன் இறந்துவிட்டதாக அவர்கள் கோஷம் எழுப்பினர்.
கர்நாடகாவின் கடலோர மற்றும் மலையோர மாவட்டங்களில் மதரீதியான தீவிரபோக்கு காணப்படுவதால் அங்கு இதுபோன்ற கொண்டாட்டங்களில் சிலர் ஈடுபட்டனர். அதே நேரம் மாநிலத்தின் பிற பகுதிகளில் அதுபோன்ற செயல்களில் யாரும் இறங்கவில்லை.
அனந்தமூர்த்தியின் மறைவுக்கு மாநில அரசே மூன்று நாள் துக்கம் அனுசரிக்கும் நிலையில், பஜ்ரங்தள் உள்ளிட்ட இந்து அமைப்பினர் கொண்டாட்டம் நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலுக்கு ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. மங்களூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே தங்கள் அமைப்பை சேர்ந்தவர்கள், போராட்டம் நடத்துவார்கள் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications