இந்தியா செத்துக் கொண்டிருக்கும் போது வாழ்வதில் என்ன பயன்? நடிகர் மோகன்லால் வேதனை
திருவனந்தபுரம்: "இந்தியா செத்துக் கொண்டிருக்கும் போது வாழ்வதில் என்ன பயன்?" என்ற தலைப்பில் தனது பிளாக்கில் மலையாள நடிகர் மோகன்லால் வேதனையை வெளியிட்டுள்ளார்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தற்போது நடைபெற்று வரும் போராட்டத்தை முன்னிட்டு அவர் இவ்வாறு வேதனை வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மோகன்லால் தனது வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது: ஜம்மு-காஷ்மீரில் சியாச்சினில் நடந்த பனிச்சரிவில் சிக்கி 10 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அதில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த சுதீசும் ஒருவர், அவர் தனது 4 மாத குழந்தையை கூட பார்க்க முடியாத நிலையில் நாட்டிற்காக போராடி இறந்துள்ளார்.
நாட்டுக்காக தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் கடும் குளிர் பிரதேசத்தில் பணியாற்றி வீரமரணம் அடைகிறார்கள் நமது ராணுவ வீரர்கள். நாம் வீட்டில் வசதியாக உட்கார்ந்து கொண்டு டி.வி. பார்ப்பதற்கும் அவர்கள்தான் காரணம். தேசப்பற்றுக்கு பொருள் தேடுபவர்கள்தான் ராணுவத்தினரையும் விமர்சிக்கின்றனர். தங்கள் குடும்பத்தினரை கூட பார்க்க முடியாமல் அவர்கள் உங்களை காக்கின்றனர். அதற்காக பாதுகாப்பு படையினருக்கு "நன்றி" என்று தெரிவித்துள்ளார்.
சுதந்திரத்தை பாதுகாக்காத எந்த ஒரு விவாதமும், அதாவது பலபேர் தியாகம் செய்து நாம் வாங்கிய, இப்போது வரை பராமரித்து வரப்படும், சுதந்திரத்தை வலுப்படுத்த உதவாத எந்த ஒரு விவாதமும் அர்த்தமற்றது என்பதோடு, தேசத்துக்கு பெரிய அவமதிப்பாகும்.
எது நாட்டுப்பற்று என்பதை விளக்க நாம் ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுக் கொள்கிறோம். இதைவிட இந்த உலகில் வெட்கக் கேடானது ஏதாவது இருக்க முடியுமா? நாட்டுக்காக தங்களது வாழ்க்கையைத் தியாகம் செய்தோருக்கு இதைவிட வேறு இழுக்கு என்ன வேண்டும்?
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் பேசும்போதோ, அல்லது மகளுக்கு தந்தை கடிதம் எழுதும் போதோ, தங்கள் மகனோ, மகளோ தேசத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்புவது கூடாது என்று அறிவுரை வழங்க வேண்டும். தேசத்தின் அருமை பெருமைகளை கூறி கூறி வளர்க்க வேண்டும். சுதந்திரத்தின் உண்மையான அர்த்தத்தை அவர்கள் மனதில் விதைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்..
நடிகர் மோகன்லால் இந்திய ராணுத்தால் கவுரவ லெப்னிடன்ட் கர்னலாக நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.