ஆந்திராவில் அமைச்சராக பதவியேற்றார் நடிகை ரோஜா.. பள்ளிக் கல்வித் துறையா? உணவுத் துறையா? எந்த இலாகா?
அமராவதி: ஆந்திரா அமைச்சரவையில் நடிகையும் நகரி தொகுதி எம்எல்ஏவுமான ரோஜா உள்பட 25 பேர் கொண்ட அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டார்கள்.
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடந்த 2019ஆம் ஆண்டில் முதல்வராக பதவி பொறுப்பேற்றார். இதையடுத்து ஜெகன் அமைச்சரவையில் 25 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். ஆனால் அவர்கள் இரண்டரை ஆண்டுகள் மட்டுமே அந்த பதவியில் நீடிப்பர் என ஜெகன் முன்னரே தெரிவித்திருந்தார்.
4 கப் வச்சிருக்கறதுனால தான எங்களை பொளக்குறீங்க.. எங்க அமிதாப்மாமாகிட்ட 5 கப் இருக்கு!
மேலும் அந்த 25 பேருக்கு பதில் புதியவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும் அவர்கள் மீதமுள்ள இரண்டரை ஆண்டுகளுக்கு அமைச்சர்களாக செயல்படுவர் என்றும் அறிவித்திருந்தார்.
3 ஆண்டுகள்
இந்த நிலையில் அமைச்சரவை பதவியேற்று 3 ஆண்டுகள் ஆகும் நிலையில் புதிய அமைச்சரவையை நியமனம் செய்ய முதல்வர் ஜெகன் மோகன் முடிவு செய்தார். அதில் அமைச்சராக இருந்த கவுதம் ரெட்டி அண்மையில் மாரடைப்பால் மரணமடைந்தார்.
24 பேர் ராஜினாமா
இதையடுத்து 24 பேரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதுவரை சிறப்பாக பணியாற்றியவர்கள் மற்றும் மூத்த அமைச்சர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதன் பின்னர் புதிதாக யாருக்கு வாய்ப்பு வழங்கலாம் என ஆலோசிக்கப்பட்டது.
25 அமைச்சர்கள்
அதன்படி தற்போது பழைய அமைச்சர்கள் பட்டியலில் இருந்து 11 பேரும் புதிதாக 14 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. பழையவர்களில் ஆதி மூலபு சுரேஷ், பெத்திரெட்டி ராம சந்திரா ரெட்டி, நாராயணசாமி, பி. சத்யநாராயணா, ராஜேந்திரநாத் ரெட்டி, விஸ்வரூப், அப்பல ராஜு, வேணுகோபால கிருஷ்ணா, அம்ஜத் பாஷா, தேனேட்டி வனிதா, கும்மனூர் ஜெயராமன், ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரானார் ரோஜா
புதிய அமைச்சர்களில் நகரி தொகுதி எம்எல்ஏவும் நடிகையுமான ஆர் கே ரோஜாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதனால் அவர் முதல்முறையாக அமைச்சரானார். ரோஜா தவிர குடிவாடா அமர்நாத், புடி முட்யாலா நாயுடு, தாடிசெட்டி ராஜா, ராஜண்ணா டோரா பீடிகா, தர்மான பிரசாத் ராவ், ஜோகி ரமேஷ், அம்பத்தி ராம்பாபு, மெருகு நாகார்ஜுனா, விடடாலா ரஜினி, கொட்டு சத்யநாராயணா, குருமுரி வெங்கட நாகேஸ்வர ராவ், காகனி கோவர்த்தன ரெட்டி மற்றும் உஷா ஸ்ரீ சரண் ஆகிய 13 பேர் அமைச்சர்களாகிறார்கள். புதிய அமைச்சரவையில் திருப்பதி உள்பட 8 மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இன்று பதவிப்பிரமாணம்
புதிதாக பதவியேற்க உள்ள அமைச்சர்கள் குழு நேற்றைய தினம் அமராவதிக்கு புறப்பட்டனர். இன்று காலை 11.31 மணிக்கு தலைமை செயலக அலுவலகத்தில் ஆளுநர் விஸ்வபூஷண் ஹரிசந்தன் புதிய அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அப்போது ரோஜா உள்பட 25 அமைச்சர்கள் புதிதாக பதவியேற்றுக் கொண்டார்கள். இவர்களுக்கான இலாகா நாளை ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிகிறது. ரோஜாவுக்கு பள்ளிக் கல்வித் துறை அல்லது உணவுத் துறை ஒதுக்கப்படும் என தெரிகிறது. அடுத்த ஆண்டு ஆந்திரா சட்டசபை தேர்தலை சந்திக்கவுள்ள நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி கட்சி வெற்றிக்கு ஒரு காரணமாக விளங்கும் ரோஜாவுக்கு முக்கிய இலாகா கொடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.