பீகார் தேர்தல் பிரச்சார களத்தில் அத்வானிக்கு நோ-என்ட்ரி போட்ட பாஜக!
பாட்னா: அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் சத்ருகன் சின்ஹா போன்ற பாஜகவின் சீனியர் தலைவர்களை பீகார் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்திற்கு பாஜக அழைக்கப்போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பீகாரில் வரும் அக்டோபர் 12ம் தேதி முதல் நவம்பர் 5ம் தேதிவரை 5 கட்டங்களாக தேர்தல் நடந்து, நவம்பர் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்த தேர்தலுக்கான ஸ்டார் பிரச்சார பீரங்கிகளின் பெயர் பட்டியலில் முன்னாள் துணை பிரதமர் அத்வானி, முன்னாள் மத்திய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி நடிகரும், பாஜக சீனியர் தலைவருமான சத்ருகன் சின்ஹா ஆகியோர் பெயர் சேர்க்கப்படவில்லை என்று பெயர் தெரிவிக்க விரும்பாத பாஜக தலைவர் ஒருவர் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
அத்வானி போன்ற சீனியர்களை ஓரம்கட்டி, பிரதமர் நரேந்திரமோடி போன்ற அடுத்த தலைமுறையினரை பாஜகவில் தூக்கிபிடிக்கும் முயற்சியின் ஒரு அங்கமாக இந்த நடவடிக்கை நிகழ்ந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
மோடி, அமித்ஷா, ராஜ்நாத்சிங், சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி, ராஜிவ் பிரதாப் ருடி, கிரிராஜ் சிங், மனோகர் பாரிகர், அனந்தகுமார் மற்றும் தர்மேந்திர பிரதான் போன்றோர் பாஜகவின் ஸ்டார் பிரச்சாரகர்களாக இருக்கப்போகிறார்களாம்.
அத்வானி பாஜகவில் இணைந்து மேலிட தலைவராக உயர்ந்த பிறகு, பீகாரின் சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களில் பிரச்சாரம் செய்யாமல் இருக்கப்போவது இதுதான் முதல்முறை.