அருண் ஜேட்லி விவகாரம்... பா.ஜ.க.வில் மீண்டும் போர்க்கொடி தூக்கும் அத்வானி அணி!!
டெல்லி: மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி மீதான கிரிக்கெட் சங்க ஊழல் புகார்கள் குறித்து கட்சி மேலிடம் விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்த பா.ஜ.க. மூத்த தலைவர்களான அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, யஸ்வந்த் சின்ஹா ஆகியோர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாரதிய ஜனதா கட்சியில் மோடி, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் பா.ஜ.க. தேசியத் தலைவராக அமித்ஷா பொறுப்பேற்ற நிலையில் அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்களை ஓரம் கட்டும் வகையில் மார்க்தர்ஷக் மண்டல் என்ற குழுவை உருவாக்கி தீவிர அரசியலில் இருந்து ஒதுக்கி வைத்தனர்.
இதில் மிகக் கடுமையான அதிருப்தியில் இந்த தலைவர்கள் இருந்து வந்தனர். அண்மையில் பீகார் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. படுதோல்வியைச் சந்திக்க நேர்ந்தது. அப்போது அத்வானி அணி, பா.ஜ.க. மேலிடத்தை மிகக் கடுமையான விமர்சித்தது. இதனைத் தொடர்ந்து அவர்களை சமாதானப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் நிதி அமைச்சரும் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அருண் ஜேட்லி, கிரிக்கெட் சங்க ஊழல் புகாரில் சிக்கியிருக்கிறார். அதுவும் ஜேட்லி மீது தொடர்ந்து ஊழல் புகார்களை கூறி வந்ததும் பா.ஜ.க. எம்.பி. கீர்த்தி ஆசாத்தான்.. மேலும், ஹவாலா விவகாரத்தில் அத்வானி ராஜினாமா செய்து மீண்டதைப் போல அருண்ஜேட்லியும் மீள்வார் என பிரதமர் மோடியும் பேசியதால், ஜேட்லியையும் அத்வானி அணிக்கு தள்ளுகிறார்களோ என்ற சந்தேகம் கிளப்பப்பட்டது.
இதனிடையே கீர்த்தி ஆசாத்தை பா.ஜ.க. சஸ்பென்ட் செய்வதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து டெல்லியில் முரளி மனோகர் ஜோஷியின் வீட்டுக்கு அத்வானி, சாந்த குமார், யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் நேற்று சென்றனர். இந்த அணி தலைவர்கள் சுமார் 1 மணிநேரம் தீவிர ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் கீர்த்தி ஆசாத் மீதான கட்சி ஒழுங்கு நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவிக்க முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.
மேலும் அருண் ஜேட்லி மீதான ஊழல் புகார்கள் குறித்து பா.ஜ.க. மேலிடம் விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்த இந்த அணி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பா.ஜ.க. மூத்த தலைவர்களே பகிரங்கமாக இப்படி ஒரு கோரிக்கையை வெளிப்படுத்தினால் எதிர்க்கட்சிகள் அதை கையில் எடுத்துக் கொண்டு மத்திய அரசுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தும் என்பதால் அத்வானியை உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், அருண்ஜேட்லி ஆகியோர் நேற்று அவசரம் அவசரமாக சந்தித்து சமாதானப்படுத்தியும் உள்ளனர்.