ஆப்கான் பள்ளியில் தற்கொலைப்படை தாக்குதல்.. 100 மேற்பட்ட குழந்தைகள் பலி என தகவல்! ஷாக் வீடியோ
காபூல்: ஆப்கான் தலைநகர் காபூலில் ஏற்பட்ட மிகச் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் பலர் உயிரிழந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
ஆப்கானில் இருந்த அமெரிக்கப் படைகள் கடந்த ஆண்டு வெளியேறிய நிலையில், அங்கு மக்களாட்சி கவிழ்க்கப்பட்டது. இதையடுத்து அங்குத் தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்தனர்.
தாலிபான்கள் அங்கு ஆட்சியைப் பிடித்தது முதலே பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குண்டுவெடிப்பு சம்பவங்களும் தொடர்ச்சியாக அரங்கேறி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடியையே ஓவர்டேக் செய்த.. அமெரிக்கப் பாப் பாடகி டெய்லர் ஸ்விப்ட்.. எதில் தெரியுமா
குண்டுவெடிப்பு
இந்தச் சூழலில் ஆப்கான் தலைநகர் காபூலில் இயங்கி வரும் கல்வி மையம் ஒன்றில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் குறைந்தது 100 மாணவர்கள் உயிரிழந்து இருக்கலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த மாணவர்கள் பெரும்பாலும் ஹசாரா மற்றும் ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று இது தொடர்பாக உள்ளூர் செய்தியாளர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.
100 பேர் பலி?
ஆப்கானிஸ்தானில் இருக்கும் மூன்றாவது பெரிய இனக்குழு ஹசாரா ஆகும். காபூல் நகரின் மேற்கில் உள்ள தஷ்ட்-இ-பார்ச்சி பகுதியில் உள்ள காஜ் கல்வி மையத்தில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக பிபிசி செய்தி வெளியிட்டு உள்ளது. இதுவரை 100 மாணவர்களின் உடல் கண்டெடுக்கப்பட்டு உள்ளதாக உள்ளூர் செய்தியாளர் பிலால் சர்வாரி தெரிவித்து உள்ளார். இன்றைய தினம் பள்ளிகளில் மாணவர்கள் அதிகம் வந்து இருந்ததாகவும் வகுப்பறை நிரம்பியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
கல்வி நிறுவனம்
கல்வி நிறுவனத்தில் பயிற்சி தேர்வு இன்று நடைபெற இருந்ததாகவும் அதற்காக அதிகப்படியான மாணவர்கள் அங்கு இருந்ததாகவும் பிலால் சர்வாரி தெரிவித்து உள்ளார். இதன் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. உயிரிழந்தோரின் உடல்களை அடையாளம் கண்டு மீட்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வீடியோ
குண்டுவெடிப்பு நிகழக் கொஞ்ச நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோவும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அதில் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் ஏகப்பட்ட மாணவ -மாணவிகள் இருப்பது தெரிகிறது. மாணவர்கள் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டு இருந்த போது, அந்த தற்கொலைப்படை தீவிரவாதி கல்வி நிறுவனத்திற்குள் நுழைந்து உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்துள்ளான்.
அதிகரித்து உள்ளது
மேற்கு காபூலில் உள்ள இந்த தஷ்ட்-இ-பார்ச்சி பகுதி ஐஎஸ் பயங்கரவாதிகள் அதிகம் குறிவைத்து தாக்கப்படும் பகுதிகளில் ஒன்றாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் படுகாயம் அடைந்த மாணவ- மாணவிகள் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளன. உயிரிழப்புகள் குறித்து துல்லியமான தகவல்கள் இல்லை. சில சர்வதேச ஊடகங்கள் 23 பேர் உயிரிழந்து உள்ளதாகத் தெரிவித்து உள்ளன.
அமெரிக்கா கண்டனம்
சிறார்கள் படிக்கும் கல்வி நிறுவனத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் சம்பவத்திற்குப் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்கப் பொறுப்பாளர் கரேன் டெக்கர் தனது ட்விட்டரில், "காஜ் உயர்கல்வி மையம் மீதான தாக்குதலை அமெரிக்கா கண்டிக்கிறது. தேர்வு எழுதும் மாணவர்கள் இருக்கும் இடத்தை குறிவைத்துத் தாக்குதல் நடத்துவது வெட்கக்கேடானது" என்று தெரிவித்து உள்ளார்.